பல கட்டிடங்களை திறந்து வைத்த  அமைச்சர் ஆர்.காந்தி!

பல கட்டிடங்களை திறந்து வைத்த  அமைச்சர் ஆர்.காந்தி!

கு.அசோக்,

  இராணிப்பேட்டை நகராட்சி பகுதிகளில் 78 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

 இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது.

 இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் ஆர்.காந்தி புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தினை திறந்து வைத்து குழந்தைகளுடைய பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.     

 முன்னதாக அங்கன்வாடி மையத்தில் பயிலக்கூடிய குழந்தைகள் அமைச்சருக்கு ரோஜா பூக்களை வழங்கி உற்சாகத்துடன் வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து இராணிப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் புதியதாக பயணியர் நிழற்குடை கட்டிடத்தினை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்து பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

  தொடர்ந்து  பிஞ்சி துரைசாமி லே - அவுட் பகுதியில் 18.50 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட நியாய விலைக்கடை கட்டிடத்தினையும், ஜெயராம்பேட்டை பகுதியில் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம், அதேபோல் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இரண்டு இடங்களில் 19.55 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கழிவறை கட்டிடம் உட்படமொத்தமாக 78 லட்சம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட கட்டிடங்களை அமைச்சர் திறந்து வைத்தார்.

  இந்த நிகழ்ச்சிகளில்,  அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், இராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத்தலைவர் ரமேஷ் கர்ணா, உட்பட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.