செய்தியாளர்களுக்கு வண்டு வடை!! எடுத்து போட்டுவிட்டு சாப்பிட சொன்ன பிஆர்ஓ ஊழியர்! ஊடக சங்கம் கண்டனம் !!

க.பாலகுரு,
மயிலாடுதுறையில் வாக்கு எண்ணும் மையத்தில் செய்தியாளருக்கு வழங்கப்பட்ட உணவில் வண்டு. மக்கள் தொடர்பு அலுவலக ஊழியர்கள் உணவில் உள்ள வண்டை எடுத்து தூர எறிந்து சாப்பிடுங்கள் என்று தெனாவட்டு பதில்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை மண்ணமந்தலில் உள்ள ஏவிசி தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதற்காக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில், மீடியா கண்ட்ரோல் ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்களுக்கு குடிநீர் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது வழக்கம்.
இந்நிலையில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் செய்தியாளருக்கு வழங்கப்பட்ட உணவில், வடையின் உள்ளே வண்டு இருந்துள்ளது.
இது குறித்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலரிடம் கேட்ட போது, வண்டை எடுத்து போட்டு விட்டு சாப்பிடவும் என தெனாவட்டாக பதில் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட செய்தியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், பல செய்தியாளர்களுக்கு உணவும் வழங்காமலும், வெறும் இட்லி மட்டும் வழங்கியுள்ளனர்.
அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்தால் செய்தியாளர்கள் யாரும் உணவு எடுத்து வரவில்லை.
மேலும், வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே சென்றுவர அனுமதி இல்லை என்பதால் செய்தியாளர்கள் உணவு இன்றி சிரமப்பட்டனர்.
அதே போல் நாகபட்டினம் மற்றும் மயிலாடுதுரை வாக்கு எண்ணும் மையங்களில் கேமிரா வைத்துள்ள செய்தியாளார்களை மட்டுமே அனுமதித்தனர். தற்போதைய நிலவரப்படி பல ஊடக நிறுவனங்கள் செல் போனில் ஆப் கொடுத்து லைவ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த அப்டேட்டையெல்லாம் அறியாத பிஆர்ஓ ஊழியர்கள் செய்தியாளர்களை அலைகழித்தனர்,
இது குறித்து ஊடக உரிமைக்குரல் மற்றும் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.எம்.தமிழன் வடிவேல் தெரிவிக்கையில், தமிழகத்தில் உள்ள சில மாவட்ட பிஆர்ஓக்களுக்கு செய்தியாளர்களை பார்த்தால் ஒரு வெறுப்புணர்ச்சி இருந்துக் கொண்டே இருக்கிறது. அவர்கள் ஒன்றும் அவர்கள் அப்பன் வீட்டு பணத்தில் செய்தியாளர்களுக்கு பணிவிடை செய்யவில்லை. இப்போது கூட தேர்தல் ஆணையம் தான் வடை இட்லிக்கு கூட செலவு செய்கிறது.
மேற்படி சம்பவத்தில் கூட அனைத்து உணவையும் நிராகரித்துவிட்டு மாற்று உணவை ஏற்பாடு செய்திருக்க வேண்டிய கடமை பி ஆர் ஓ அலுவலகத்துக்கு உண்டு. இனி இவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டு கடந்து போகக்கூடிய நிகழ்வல்ல இது.
இது குறித்து அரசின் பார்வைக்கு புகாராக தெரிவிக்கப்படும் என்பதுடன் தேவை ஏற்பட்டால் சம்மந்தப்பட்டவர்களை கண்டிக்கும் விதமாக ஒரு ஆர்பாட்டம் நடத்தப்படும் .
இவர்களுடைய இழிவான செயலுக்காக ஊடக உரிமைக்குரல் சங்கத்தின் சார்பாக கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.