அண்ணாமலையை கும்பிட்டு வரவேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!

ம.பா.கெஜராஜ்,
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டவர்களை எழுந்து நின்று வரவேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயலைப்பார்த்து எடப்பாடி பழனிச்சாமி ஆடிவிட்டாராம்.
இந்நிலையில் அமித்ஷா-வேலுமணி நடத்திய சந்திப்பு குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக உடைந்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் பாஜக அந்த உடைப்பை சரிப்படுத்தி வாக்கு அறுவடைக்கு அஸ்தீரம் போட்டு வருகிறது.
இருந்த போதும் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை எக்காரணம் கொண்டும் கட்சியில் மீண்டும் சேர்ப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக உள்ளார். மேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக வுடன் கூட்டணி இல்லை என்பதிலும் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார்.
அப்படியிருக்க மேற்கு மண்டலத்தில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் டீம் பாஜக மீது பற்றாக இருந்து வருகின்றனர்.
அவர்கள் மீது ஐடி, ஈடி, சிபிஐ வழக்குகள் நிலுவையில் உள்ளது தனிக்கதை.
இருந்த போதும் பாஜக வோடு பயணிக்க எடப்பாடி பழனிசாமி ஒத்து போகவில்லை. அவரை புறக்கணிக்கும் நிலைப்பாட்டினை மாஜி அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.
குறிப்பாக பாஜக ஆதரவு நிலைப்பாடு மற்றும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு தனி அணிகளாக செயல்பட்டு வருபவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பது தொடர்பாக மேற்கு மண்டலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட 6 பேர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.
ஆனால் பாஜவுடன் கூட்டணி வைக்க எடப்பாடி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அது மட்டுமின்றி மேற்கண்ட ஆறு பேர் தன்னை சந்தித்து இணைப்புப் பற்றி பேசவில்லை என்றூ எடப்பாடி மறுத்தார்.
இதனால், எடப்பாடி பழனிசாமிக்கும், மேற்கு மண்டலத்தில் உள்ள முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையே பனிப்போர் அதிகரிக்க தொடங்கியது. இதை கவனித்த பாஜக மேலிடம், மேற்கு மண்டலத்தில் இருந்தே எடப்பாடிக்கு எதிராக ஒரு அணியை உருவாக்க நினைத்து மாஜி அமைச்சர்களுக்கு தூதுவிட்டது.
அவர்களும் பாஜக அசைவுக்கு இசைந்து மேலிடத்தை நேரில் சந்தித்து தங்களது ஆதரவு நிலைப்பாட்டினையும், கட்சி தலைமையின் எதிர்ப்பு நிலைப்பாட்டினையும் விளக்கி கூறினர்.
மேற்கு மண்டல சீனியர் நிர்வாகியான செங்கோட்டையனை முன்னிறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்க முடிவு செய்யப்பட்டது. இதன் வெளிப்பாடாகத்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கோட்டையன் எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அவர் கலந்து கொள்ளும் விழாக்களை புறக்கணித்தாக கூறப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பெயரை உச்சரிக்காமல் தவிர்தார். அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவையும் புறக்கணித்தார். சொந்த ஊரான கோபியில் கட்சி நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டார். அதிருப்தியில் இருந்த செங்கோட்டையனை சொகுசு காரில் தனியாக அழைத்து சென்று எஸ்.பி.வேலுமணி சந்தித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணியும் பங்கேற்றார். இவருக்கு அண்ணாமலை அருகில் இருக்கை கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த விழா முடிந்த பிறகு அமித்ஷாவுடன் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது, எடப்பாடி நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டதாம்.
அப்போது அமித்ஷா தரப்பில் இருந்து அதிமுக இணைப்பு குறித்து சில ஆலோசனைகள் கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வேலுமணி-அமித்ஷா ரகசிய சந்திப்பு தொடர்பான தகவல் எடப்பாடி பழனிசாமிக்கு எட்டியதும் அவர் கடும் அதிருப்தியடைந்ததக கூறப்படுகிறது.
அப்பட்ஸியிருக்க கோவையில் நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் வேலுமணி மகன் திருமண விழாவில் பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மாநில தலைவர் தமிழிசை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜ மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவுக்கு வந்த அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்களிடம் மிகவும் இணக்கமாக பேசி வரவேற்றார்.
அவர்கள் அண்ணாமலையை சந்தித்து கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது எடப்பாடி பழனிசாமிக்கு கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
திருமண விழாவுக்கு செல்ல எடப்பாடி பழனிசாமி தயாராக இருந்தார். ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை. இதற்கு முக்கிய காரணம் அமித்ஷாவுடன் வேலுமணி நடத்திய ரகசிய சந்திப்புதானாம்.
அதேநேரத்தில் பாஜக தலைவர்கள் ஒரே நேரத்தில் வருவது உறுதியானதால் எடப்பாடி பழனிசாமி அங்கு வருவதை தவிர்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
10ம் தேதி நடக்கும் திருமண வரவேற்பில் எடப்பாடி கலந்து கொள்வதாக கூறப்பட்டாலும், தனியாக ஒருநாள் வீட்டிற்கு வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக வேலுமணியிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே வருகிற 10ம் தேதி கொடிசியாவில் அதிமுகவினர் மட்டும் பங்கேற்கும் திருமண வரவேற்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வதாக உறுதியளித்துள்ளாராம்.