உணவகத்துக்கு தீவைப்பு! சப் இன்ஸ்பெக்டர் உடந்தையா?

ம.பா.கெஜராஜ்,

  சிறு உணவகத்துக்கு தீவைக்கப்பட்ட சம்பவத்துக்கு சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் உடந்தையாக செயல்பட்டாரா என்று டவுட்டு ஏற்பட்டிருக்கிறது. 

  திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வடசேரி, பகுதியில் வசித்து வருபவர் ஐசக்குமார் - பூண்டிசெல்வி தம்பதியினர்.

 இவர்கள் அதே பகுதியில் உணவகம் ஒன்று நடத்தி வருகின்றனர், இந்நிலையில் நேற்று இரவு உணவகத்தை முடித்து கொண்டு  பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் பொதுமக்கள் உணவகம் தீப்பற்றி எரிவதாக அவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

  பின்னர் விரைந்து சென்ற தம்பதியினர் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர்.

 இருந்த போதும் தீ வேகமாக பரவி உணவகம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்து உணவகத்தில் வைத்திருந்த சுமார் 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

 மேலும் இது குறித்து உமராபாத் காவல் நிலையத்தார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 இந்நிலையில், இந்த தீ வைப்பு சம்பவத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு பங்கு இருப்பதாக அப்பகுதிவாசிகள் டவுட்டு தெரிவிக்கின்றனர்.

 ஏனெனில் உணவகத்தின் உரிமையாளரின் மனைவி பூண்டி செல்வியை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் சிலர் கத்தியால் வெட்டினர். காயம்பட்ட அவர் அரசு ஆஸ்பத்திரில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த போது போலிசாரிடம் நடந்த சம்பவங்களைப் பற்றி புகார் சொன்னார்.

  ஆனால் அதன் மீது போலிசார் வழக்கு பதியாமல் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார்கள். இதில் ஒரு குறிப்பிட்ட சப் இன்ஸ்பெக்டர் ரொம்பவே ஆர்வம் காட்டுவதுடன், ஊர்மக்களை பூண்டி செல்வியின் குடும்பத்தாருக்கு எதிராக ஏவிவிடும் செயலில் ஈடுபட்டாராம்.

  அதோடில்லாமல் பூண்டி செல்வியை தாக்கியவர்கள் மீது அளிக்கப்பட்ட புகாரை வாபஸ் பெற வற்புறுத்தி மிரட்டுகிறாராம். அதற்கெல்லாம் ஒப்புக்கொள்ளவில்லை என்பதினால் இந்த தீ வைப்பு சம்பவம் நடந்திருப்பதாக பரவலாகவே பேசுகிறார்கள்.

  புகார் பெற்றவுடன் வழக்கு பதிவு செய்திருந்தால் ஏன் இப்படி டவுட்டு வரப்போவுது.