அதிமுக பொது செயலாளரானார் எடப்பாடி பழனிச்சாமி! எம்.ஜி.ஆர்.போல் வேடம்! ஓ.பி.எஸ். தரப்புக்கு சாதகமாக இரண்டு பாயிண்ட்!

ம.பா.கெஜராஜ்,
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு தலைமையிலான அமர்வு விசாரித்து வந்த நிலையில் இன்று அதன் தீர்ப்பு வெளியானது.
அந்த தீர்ப்பில் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும்" என அறிவித்த உயர் நீதிமன்றம் பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. அதில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக அதிமுக தேர்தல் ஆணையர்கள் அறிவித்தனர்.
அப்படியிருக்க, அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.
எந்த அதிகாரமும் இல்லாமல் ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டப்பட்டதால், தீர்மானங்கள் அடிப்படை முகாந்திரம் அற்றவை என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் முன் வைத்த வாதங்களை ஏற்க முடியாது.
பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைவிதித்தால் வழி நடத்த தலைவர் இல்லாமல் கட்சி பாதிக்கப்படும். தீர்மானங்களுக்கும், தேர்தலுக்கும் தடைவிதித்தால் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும்.
தீர்மானங்களுக்கு தடைவிதித்தால் ஒருங்கிணைப்பாளர்கள் தான் மீண்டும் கட்சியை நிர்வகிக்க வேண்டி வரும். ஒருங்கிணைபாளர்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதால் கட்சி செய்ல்பாடுகள் முடங்கும்.
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கம் செய்த சிறப்பு தீர்மானம் பொறுத்தவரை, அதை பிரதான வழக்கில் தான் தீர்மானிக்க முடியும்.
ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் நீக்கப்பட்ட விவகாரத்தில் 7 நாட்களுக்கு முன் நோட்டீஸ் தரவேண்டும் என்ற விதி மீறப்பட்டு உள்ளது.
ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், தீர்மானங்களும் செல்லுபடியாகக்கூடியவையே.
பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்த தீர்மானமும், இடைக்காலபொதுச்செயலாளரை நியமித்த தீர்மானங்களும் செல்லும் என தீப்பில் கூறப்பட்டிருக்கிறது.
எம்.ஜி.ஆர் வேடமிடப்பட்ட இ.பி.எஸ்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுக்கபட்ட நிலையில், அதனை கொண்டாடும் விதமாக, தலைமை அலுவலகத்துக்கு 150 கிலோ லட்டை அ.தி.மு.க. தொண்டர்கள் கொண்டு வந்தனர். எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் தனது பயோவை அதிமுக பொதுச்செயலாளர் என மாற்றினார். பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு எம்.ஜி,.ஆர்.மாதிரி தொப்பி கண்ணாடி அணிவித்து தொண்டர்கள் குஷியானார்கள்.