கமலா ஹாரிஸை பின்னுக்குத்தள்ளிய டொனால்ட் டிரம்ப்! பிரதமர் மோடி வாழ்த்து... ஜனவரி 20ல் அதிபராக பொறுப்பேற்கிறார்!

ம.பா.கெஜராஜ்,
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப், கமலா ஹாரிஸை பின்னுக்குத்தள்ளி வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் 2-வது முறையாக அவர் அதிபராக பதவியேற்க உள்ளார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. ஜனநாயக கட்சியின் இப்போதைய அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைய உள்ளது. இதையடுத்து, நவம்பர் 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் (60), குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் (78) போட்டியிட்டனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் 'எலக்டோரல் காலேஜ்' (வாக்காளர் குழு) நடைமுறை பின்பற்றப்படுகிறது. அந்த நாட்டில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. அந்தந்த மாகாணங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள்.
உதாரணமாக சிறிய மாகாணமான நெவாடாவில் 3, பெரிய மாகாணமான கலிபோர்னியாவில் 55 வாக்காளர் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதுபோல நாடு முழுவதும் 538 வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வேட்பாளர், அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும்.
அப்படியிருக்க திட்டமிட்டபடி, 50 மாகாணங்களிலும் நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து வாக்குகளை எண்ணும் பணி உடனடியாக தொடங்கி இரவு முழுவதும் நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே குடியரசு கட்சியின் டொனால்டு ட்ரம்ப் முன்னிலை வகித்தார்.
அதில் ட்ரம்புக்கு 281 இடங்கள் கிடைத்தன. அதேநேரம் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா ஹாரிஸுக்கு 222 இடங்களே கிடைத்தன. மீதம் உள்ள பெரும்பாலான இடங்களிலும் ட்ரம்ப் முன்னிலை வகித்தார்.
அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய முழுமையான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, நார்த் கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய 7 மாகாணங்கள் வெற்றியை தீர்மானிப்பவையாக உள்ளன. அந்த வகையில், இந்த தேர்தலில் பென்சில்வேனியா, நார்த் கரோலினா, விஸ்கான்சின் மற்றும் ஜார்ஜியா ஆகிய 4-ல் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். மற்ற 3 மாகாணங்களிலும் அவர் முன்னிலை வகித்தார். கடந்த தேர்தலில் 6-ல் ஜனநாயக கட்சியும் 1-ல் குடியரசு கட்சியும் வென்றது நினைவுகூறத்தக்கதாகும்.
இதைத் தொடர்ந்து ஜன.20-ம் தேதி அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்பார்.
இந்நிலையில் அதிபர் தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றுள்ள என் நண்பர் டொனால்டு ட்ரம்புக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள். உங்களுடைய முந்தைய பதவிக்காலத்தைப் போலவே, இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து செயல்பட ஆவலுடன் உள்ளேன்.
நம் இருநாட்டு மக்களின் மேம்பாட்டுக்காகவும், உலக அமைதி, ஸ்திரத்தன்மை, வளம் ஆகியவற்றை மேம்படுத்தவும் நாம் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
மேலும், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உள்ளிட்டோரும் ட்ரம்புக்கு வாழ்த்து தெரிவித்தனர்.