ஆக்கிரமிப்பு நீர்நிலைகள் குறித்த விவரம் சேகரிப்பு! வி.ஏ.ஓ.க்கள் ஒத்துழைக்க ஆட்சியர் உத்தரவு!

கண்ணன்,
ஆக்கிரமிப்பு நீர்நிலைகள் குறித்த விவரங்களை சேகரிக்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், கிராம ஊராட்சிகளில் வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் அவற்றை சேகரித்து வருகின்றனர்.
உயர்நீதிமன்றத்தில் தாக்கலான பொது நல வழக்கு ஒன்றில் நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்பு விவரங்களை தலைமை செயலர் மூலம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் பொதுப்பணி, உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கண்மாய்கள் மற்றும் ஊருணிகள், குளங்கள் உள்ளன. இவற்றில் பல நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன.இந்த ஆக்கிரமிப்பு விவரங்களை அனுப்ப கிராம ஊராட்சி நிர்வாகங்களுக்கு கலெக்டர் அனீஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார்.
ஊராட்சிகளிலுள்ள கண்மாய்கள், ஊருணிகள், வரத்துக்கால்வாய்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், அவற்றின் புல எண்கள், பரப்பளவு, எந்தவிதமான ஆக்கிரமிப்பு உள்ளது உள்ளிட்ட விவரங்களை கிராம நிர்வாக அலுவலர்களுடன் ஆலோசித்து உடனடியாக அனுப்ப ஊராட்சி செயலர்களுக்கு நோட்டிஸ் அளித்துள்ளார்.
அதே நேரத்தில் ஒத்துழைப்பு வழங்காத கிராம நிர்வாக அலுவலர்கள் குறித்து சம்பந்தப்பட்ட பி.டி.ஒ.,க்கள், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் செல்லத்துரைக்கு தெரிவிக்கவும் கூறப்பட்டிருக்கிறது.
ஆக ஆக்கிரமிப்பு விவரங்களை வருவாய்த்துறையினருடன் இணைந்து ஊரக வளர்ச்சி துறையினர் சேகரித்து வருகின்றனர்.
கூடவே மேலூர் தாலுகாவிற்குட்பட்ட நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் குறித்து ஆர்.டி.ஓ., பிர்தௌஸ் பாத்திமா, தாசில்தார் இளமுருகன், பி.டி.ஓ.,க்கள் ஜெயபாலன், செல்லபாண்டியன் உள்ளிட்டோர் ஆய்வு செய்து, அந்த விவரங்கள் தலைமை செயலர் மூலம் உயர்நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்படுவதுடன், ஆக்கிரமிப்பு என தெரியும் பட்சத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு விரைந்து அகற்றப்படும் என அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.