வாங்க மாணவர்களே! கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடைபெறுகிறது!

ஆர்.ரமேஷ்,
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்ட அளவில் மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு தனித்தனியே கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடைபெறுகிறது. 11,12ஆம் வகுப்பில் பயிலும் மேல்நிலைப்பள்ளி மாணக்கர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றாலையும் வளர்க்கும் நோக்கில் மாவட்ட அளவில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டுதோறும் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற்று பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிழும் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வாண்டு இப்போட்டிகள் திருப்பத்தூர் மாவட்டத்தில் 03.07.2023 திங்கள் கிழமையன்று திருப்பத்தூர், டோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பெற உள்ளன. முற்பகல் 9.30 மணிக்கு 11, 12ஆம் வகுப்பில் பயிலும் மேல்நிலைப்பள்ளி மாணக்கர்களுக்கும், பிற்பகல் 01.30 மணிக்கு அனைத்துக் கல்லூரிகளிலும் பயிலும் மாணக்கர்களுக்கும் தனித்தனியே போட்டிகள் நடைபெற உள்ளன.
இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசுத்தொகையாக ரூ. 10000/-, இரண்டாம் பரிசுத்தொகையாக ரூ. 7000/-, மூன்றாம் பரிசுத் தொகையாக ரூ. 5000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பெற உள்ளன.
ஒவ்வொரு போட்டியிலும் முதல் பரிசு பெறும் மாணாக்கர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள திருப்பத்தூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரால் பரிந்துரைக்கப்படுவர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் செயற்பட்டு வரும் அனைத்து (அரசு / தனியார் / நிதியுதவி / பதின்ம) மேல்நிலைப்பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவியர்கள் மற்றும் கல்லூரிகளில் (கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இதர கல்லூரிகள் (அரசு மற்றும் தனியார்)) பயிலும் மாணவ மாணவியர்கள் மட்டுமே இப்போட்டிகளில் பங்கேற்கலாம்.
ஒரு பள்ளி / கல்லூரியிலிருந்து ஒரு போட்டிக்கு இருவர் வீதம் மூன்று போட்டிகளுக்கும் ஆறு மாணாக்கர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். போட்டிகளுக்கான தலைப்புகள் போட்டிகள் தொடங்கும் முன்பு நடுவர்கள் முன்னிலையில் அறிவிக்கப்பெறும்.
மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள பள்ளி மாணாக்கர்கள் பங்கேற்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர் பரிந்துரையுடனும், கல்லூரி மாணாக்கர்கள் அவர்கள் பயிலும் கல்லூரி முதல்வரின் பரிந்துரையுடனும் திருப்பத்தூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் போட்டிகள் நடைபெறும் நாளன்று படிவத்தை நேரில் அளித்தல் வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநரை நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ (0416 - 2256166, 99522 80798) தொடர்பு கொள்ளலாம்.
மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன், இ,ஆ,ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.