பா.ஜ.க. கூட்டணிக்கு நிபந்தனை இருக்கக்கூடாதாம்! எடப்பாடி பழனிச்சாமி "தில்" முடிவு!

பா.ஜ.க. கூட்டணிக்கு நிபந்தனை இருக்கக்கூடாதாம்! எடப்பாடி பழனிச்சாமி "தில்" முடிவு!

 பா.ரமேஷ் ஆனந்தராஜ்,  

 அ.தி.மு.க. இரண்டு அணிகளாக பிரிந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பக்கம் பலம் சற்று தூக்கலாக உள்ளது. தொண்டர்கள் பலமும் அந்த தரப்புக்கே உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி, தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு வலிமையா இருக்கும் என்று பா.ஜ.க. தலைவர்கள் நம்புகிறார்கள்.

  ஆனால் அதற்கு அதிமுக ஒன்றுபட வேண்டும் அல்லவா? அது தான் பா.ஜ.க.வால் செய்யமுடியவில்லை என்று மேலோட்டமாக கூறப்படுகிறது.

 ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா எல்லோரையும் ஒருங்கிணைத்து கட்சியை பலப்படுத்த டெல்லி வாலாக்கள் முயல்கின்றனர்.

 ஆனால் எடப்பாடி பழனிசாமி அந்த மூவரையும் சேர்க்க மாட்டேன் என்பதில் கறாராக உள்ளார்.

 இதுவரை அ.தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட தயார் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறி வந்தார். ஆனால் எக்காரணத்தை கொண்டும் அவரை மட்டும் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்றார் எடப்பாடி பழனிசாமி. இப்போது அதையே ஓ.பன்னீர்செல்வம் திருப்பி சொல்கிறார்.

 ஆனால்  மோடிதான் பிரதமர். பா.ஜ.க கூட்டணியில் இடம் பெறுவோம் என்றும் கூறி வருகிறார் ஓ.பி.எஸ்.

 கடந்த சட்டமன்ற தேர்தலில் 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.க. குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்திலேயே தோற்றது. அதற்கு காரணம் டி.டி.வி.தினகரன் கட்சி வாங்கிய ஓட்டுகள் தான். மேலும் தி.மு.க.-அ.தி.மு.க. இடையேயான வாக்குவித்தியாசம் ஒரு சதவீதம்தான்.

  ஆகவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இந்த வாக்கு வித்தியாசத்தை ஈடுகட்ட அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று பா.ஜ.க தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.

  ஆனால்  இந்த நிபந்தனையை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.

   இந்த நிலையில் நாளை மறுநாள் (5-ந் தேதி) அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. வுடன் கூட்டணி அமைப்பது, கூட்டணி அமைக்க அக்கட்சி விதித்துள்ள நிபந்தனைகள் பற்றி விவாதிக்கப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா இணைப்பு உள்ளிட்ட எந்த நிபந்தனைகளையும் பா.ஜ.க விதிக்கக்கூடாது. நிபந்தனையற்ற முறையில் மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை என்று தீர்மானமும் நிறைவேற்றப்படும் என தகவல்கள் லீக் ஆகியிருக்கிறது.