அண்ணாமலையின் டங்ஸ்டன் பாலிடிக்ஸ்! அப்படியே நீட் தேர்வையும் ரத்து செய்ய வைப்பாரா!

அ.கார்தீஸ்வரன்,
மதுரை மாவட்டம், மேலூர் வட்ட்டம், அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்க நடத்திட ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இதனை அப்பகுதி மக்கள் கும்மியடித்து குதுகளித்தனர்.
இதற்கு பாஜக தமிழ்மாநில தலைவர் அண்ணாமலையே காரணம் என்று மக்கள் மனதில் பதிந்துவிட்ட நிலையில், அப்படியே அவர் நீட் தேர்வையும் ரத்து செய்ய வைப்பாரா என்று எதிர்பார்க்கிறார்கள்.
இது பற்றின விவரம் வருமாறு,
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள நாயக்கர்பட்டியில் 2,015.51 ஹெக்டேர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கத்தை குத்தகைக்கு விடும் ஏல அறிவிப்பு வெளியானது. இந்த ஏலமானது நவ.7-ம் தேதி வேதாந்தாவின் துணைக் குழுமமான ஹிந்துஸ்தான் ஜிங் லிமிடெட்டுக்கு வழங்கப்பட்டது.
இதற்கு மேலூர் பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து போராடினர்.
அரிட்டாபட்டி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நடந்த கிராம சபைக் கூட்டங்களில் டங்கஸ்டன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து கிராமங்கள் தோறும் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது.
அதேபோல் மேலூரில் விவசாயிகள், வணிகர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம், கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா மூலம் உறுதியளித்தனர்.
பிரச்சனை தீவிரமடைந்த சூழலில் டிச.9-ம் தேதி டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகள் சார்பில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், "நாங்கள் (திமுக) ஆட்சியில் இருக்கும் வரை திட்டத்தை வரவிடமாட்டோம். ஒருவேளை திட்டம் வந்தால் நான் முதல்வர் பதவியில் இருக்கமாட்டேன்" என உறுதிபடி பேசினார்.
இதற்கிடையே, ஜன.7-ம் தேதி மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடியிலிருந்து சுமார் 15 கிமீ நடைபயணமாக மதுரை வந்த போராட்டக் குழுவினர் தல்லாகுளம் தபால்நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போன்று தமிழகம் முழுவதும் மக்களின் கவனத்தை ஈர்த்தது.
மதுரை எம்பி.சு.வெங்கடசன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு கட்சித் தலைவர்களும் மேலூர் பகுதிக்கு வந்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்து டிராமா போட்டார்.
இதற்கிடையே, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு பொருட்களை வாங்காமல் அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி கிராம மக்கள் புறக்கணித்தனர். வீடுகளின் முன்பாக டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து வாசலில் கோலமிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும், மக்கள் டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பதாகைகளை கையில் ஏந்தி நின்றனர்.
அதே போல் தமிழக எதிர்கட்சிகள் கூக்குரல் போட்டன. அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அப்பகுதி மக்களை சந்தித்து, டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக மத்திய அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்று ரத்து செய்யப்படும், அறிவிப்பை மத்திய அமைச்சர் விரைவில் வெளியிடுவார் என்று உறுதி அளித்தார்.
இருப்பினும், மத்திய அரசு அறிவிப்பாக வெளியிட வேண்டும் என கிராம மக்கள் சார்பில் அவரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாநிலப் பொதுச்செயலாளர் ராம.ஸ்ரீனிவாசன் ஆகியோர் தலைமையில் மேலூர் பகுதி விவசாயிகள் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டியை சந்தித்து இயற்கை வளங்ளைப் பாதிக்கும் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, டங்ஸ்டன் கனிம ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் அறிவித்தது.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,
'மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டியை, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் குழுவினர் டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம பகுதியில் அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தளமும் பல கலாச்சார பாரம்பரிய தளங்களும் உள்ளன என்று மத்திய அமைச்சரிடம் தெரிவித்தனர். குழுவினரின் கோரிக்கைகளைப் பொறுமையாகக் கேட்டறிந்த மத்திய அமைச்சர், பல்லுயிர் பாரம்பரிய பாதுகாப்புக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, இப்பகுதியில் பல்லுயிர் தலத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசின் உறுதிப்பாட்டையும் கருத்தில் கொண்டு, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம ஏலத்தை ரத்து செய்ய சுரங்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானதை அறிந்த மேலூர் பகுதி மக்கள் உற்சாகமான முழக்கத்துடன் கிராமங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பட்டாசுகள் வெடித்தும் சிறுவர்கள், பெண்கள் உட்பட பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
பெண்கள் கும்மியடித்தும், ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளியான நிலையில், மாநில அரசின் வாயிலாக இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இந்நிலையில் அதிமுகவின் தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அண்ணாமலை இந்த விஷயத்தில் சிறப்பு கவனம் எடுத்துக் கொண்டதைப் போலவே நீட் தேர்வு விஷயத்திலும் கவனம் செலுத்தி அதை ரத்து செய்ய வைத்தால் நலமாக இருக்குமே என்று பலரும் சொல்கிறார்கள்.
முன்னதாக அண்ணாமலை விவசாயிகளை டெல்லிக்கு அமைச்சரை சந்திக்க அழைத்துச்சென்ற போது, வேறு சில விவசாயிகள் அந்த பயணத்தை தடுக்க ஏர்போர்ட் சென்றனர். ஆனால் அதற்குள் விமானம் பறந்துவிட்டது.
அப்போது அங்கு வந்த விவசாயி, சும்மா பேச்சு வார்த்தை, என்று சொல்லிவிட்டு வந்தால் நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம், ஏலத்தை முற்றிலுல் ரத்து செய்ய வேண்டும் இல்லையென்றால் ஊருக்குள் விடமாட்டோம் என்று பொங்கியது நினைவிருக்கலாம்.
அமைச்சர் சார் என்ன ஆச்சுங்க?