இந்தியா கூட்டணியை முந்திக்கொண்ட அமித்ஷா! ஜனாதிபதியுடன் திடீர் சந்திப்பு!

ம.பா.கெஜராஜ்,
எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியினர் ஜனாதிபதியை சந்திக்க உள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா முந்திக்கொண்டிருக்கிறார்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை எதிர்க்கட்சிகள் (இந்தியா)கூட்டணியினர் சந்திக்க உள்ளனர்.
மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணி வலியுறுத்தி வருகிறது. அதற்காக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் 21 பேர், கடந்த வாரம் 2 நாள் பயணமாக மணிப்பூர் சென்று வந்தனர். அங்குள்ள நிலவரத்தை 'இந்தியா' கூட்டணி தலைவர்களிடம் எடுத்துரைத்தனர். இதையடுத்து, இப்பிரச்சினையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் தலையீட்டை இந்தியா கூட்டணி கோரியுள்ளது. இந்தியா கூட்டணி சார்பில் முறையிட நேரம் ஒதுக்கக்கோரி, ஜனாதிபதிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதி உள்ளார்.
இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்களை இன்று (புதன்கிழமை) காலை 11.30 மணிக்கு சந்திக்க ஜனாதிபதி நேரம் ஒதுக்கி உள்ளார்.
அப்போது மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியிடம் மனு அளிக்க உள்ளன. மேலும், நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறாதது குறித்தும் முறையிட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்துப் பேசினார். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மரியாதை நிமித்தமாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை உள்துறை மந்திரி அமித்ஷா சந்தித்துப் பேசினார் என ஜனாதிபதி மாளிகையின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.