முறைக்கும் ஈரான் வா போரிடலாம் என அழைக்கும் இஸ்ரேல்! 

முறைக்கும் ஈரான்  வா போரிடலாம் என அழைக்கும் இஸ்ரேல்! 

  ஆர்.ரவிகாலேப்,

   ஹமாஸ் தாக்குதலில் இதுவரை 1,400 இஸ்ரேல் நாட்டவர் உயிரிழந்துள்ளனர். பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து எட்டு நாட்களாக வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. காஸாவில் இது வரை 2,300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் மூன்றில் ஒரு பகுதியினர் குழந்தைகள் என்பது வேதனை. 

  இந்நிலையில் காஸா எல்லையில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். டாங்கிகள், கனரக துப்பாக்கிகள் தவிர கனரக ஆயுதங்களை இஸ்ரேல் குவித்துள்ளது. இஸ்ரேல் அறிவித்துள்ள 'தரை வழி' தாக்குதலை அது எந்த நொடியிலும் தொடங்கலாம் என்கிற பதற்றமான சூழல் உள்ளது.

  அப்படியிருக்க ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் அமிர் அப்துல்லாயின் மத்திய கிழக்கு நாட்டு தலைவர்களை சந்திக்கிறார். இராக், சிரியா நாட்டு தலைவர்களுடன் சந்தித்த பிறகு லெபனான் மற்றும் கத்தார் நாடுகளுக்கும் சென்றுள்ளார்.

   காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்த அறைகூவல் விடுத்தார். லெபனானின் ஹிஸ்புல்லா இதில் ஈடுபட்டால், இந்த மோதல் மத்திய கிழக்கின் பிற பகுதிகளுக்கும் பரவும் என அவர் எச்சரித்தார். "அப்படி நடந்தால், ஒரு பெரிய ஆபத்தை இஸ்ரேல் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்றார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் செய்தியாளர்களை சந்தித்த போது ஹிஸ்புல்லா இந்த பிரச்னையின் அனைத்து அம்சங்களையும் கணித்து வைத்துள்ளது என்றும் இஸ்ரேல் காஸா மீதான தனது தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

இஸ்ரேல் தனது தரைவழி தாக்குதலை தொடங்கினால், தான் தலையிட வேண்டியிருக்கும் என இரான் ஐக்கிய நாடுகள் மூலமாக இஸ்ரேலுக்கு செய்தி அனுப்பியிருப்பதாக, அமெரிக்க செய்தி இணையதளம் ஆக்சியோஸ் கூறுகிறது. உயர் மட்ட அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்ததாக ஆக்சியோஸ் தெரிவித்துள்ளது. இரான் மற்றும் ஹிஸ்புல்லா காஸா விவகாரத்தில் தலையிடுவதை தடுக்க அமெரிக்கா முயற்சி செய்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த செய்தி வந்துள்ளது.

  ஆனால் அதற்கெல்லாம் அசைந்து கொடுக்காத இஸ்ரேல் வா போரிடலாம் என்று ஈரானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.

    ஈரான் நேரடியாக இஸ்ரேலுடன் போரில் இறங்குமா என்ற கேள்வி எழுகிறது. இரான் மீது நேரடி தாக்குதல் நடத்தப்பட்டல் ஒழிய இரான் இந்த போரில் நேரடியாக ஈடுபடாது என நிபுணர்கள் கூறுகின்றனர். அதுவரை ஹிஸ்புல்லா அல்லது சிரியாவில் உள்ள குழுக்கள் மூலம் இரானின் தலையீடு இருக்கும்.

   இந்நிலையில் இரண்டு அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்க மத்திய கிழக்கு வந்தடைந்துள்ளது. ஹமாஸ்-இஸ்ரேல் மோதலில் ஈரானின் ஈடுபாடு இருந்தால், இந்த பிரச்னை மத்திய கிழக்கின் பிற பகுதிகளுக்கு பரவும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

  லெபனான் - இஸ்ரேல் எல்லையில் ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது ஏவுகணைகளை பயன்படுத்தி வருவதாகவும் அதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய செய்தியறிக்கைகளின் படி, ஒரு கிராமத்தின் மீது ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார், பலர் காயமடைந்துள்ளனர்.

  லெபனான் தாக்குதலுக்கு பிறகு, லெபனானுடனான எல்லைப் பகுதியில் 4 கி.மீ தூரத்தை இடைப்பகுதியாக அறிவித்து அங்கிருந்து மக்களை வெளியேற்றியுள்ளது இஸ்ரேல்.

   இந்நிலையில், காஸாவில் இஸ்ரேல் செய்து கொண்டிருப்பது, "போர் குற்றம், இனப் படுகொலைக்கு சமம்" என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ராய்ஸி தெரிவித்துள்ளார். 

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்கு பிறகு, ஈரான் இஸ்ரேலை தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இஸ்ரேலின் கொள்கைகளால் தான் இந்த தாக்குதல் நடைபெற்றதாக அது கூறி வருகிறது.

   இந்த விவகாரத்தில் ஈரான் ஹமாஸ் உடன் நிற்பதை தெளிவாக்கியிருக்கிறது. ஹமாஸ்-ன் பல தலைவர்கள் தங்களுக்கு ஈரான் உதவி வருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

 இந்த சூழ்நிலையில், ஈரான் இஸ்லாமிய உலகின் தலைவராக விரும்புகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பது நாட்களாக இஸ்ரேல் வான் படைகள் தொடர்ந்து காஸா மீது குண்டுகள் செலுத்தி வருகின்றன. காஸாவின் பெரும்பகுதி முழுவதும் தரைமட்டமாகியுள்ளது. காஸாவுக்கு மின்சாரம், உணவுப்பொருட்களின் விநியோகத்தை நிறுத்தியதுடன், தண்ணீர் தருவதையும் நிறுத்தி விட்டது இஸ்ரேல். காஸாவில் உள்ள பல மருத்துவமனைகளில் மின்சாரம் இல்லை . குண்டுகளிலிருந்து தப்பிக்க பலர் மருத்துவமனைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.  ஆனால் மருத்துவமனைகள் மீதும் குண்டுகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

   இந்நிலையில், காஸாவில் உள்ள பல லட்சம் பேரை எகிப்து எல்லை நோக்கி நகர இஸ்ரேல் கூறியுள்ளது.