கலைஞரின் கண் அசைவைப் போலவே என்னையும் புரிந்துக் கொண்டு செயல்படுபவர் எ.வ.வேலு! புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

ம.பா.கெஜராஜ்,
கலைஞரின் கண் அசைவைப் புரிந்துக் கொண்டு செயல்படுபவர் எ.வ.வேலு, அதே போல் என்னையும் புரிந்துக் கொண்டு செயல்படுகிறார் என்று புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' என்கிற புத்தக வெளியீடு விழா இன்று (சனிக்கிழமை) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட அதை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.
கலைஞரின் தாய் தங்களை எப்படி பேணி வளர்த்தார் என சிவாஜி, எம்ஜிஆர் ஆகியோர் கூறுவார்கள். பலருக்கும் தாய் போலவே செயலாற்றிய கலைஞரை தாய் என விளிப்பது சாலப் பொருத்தம். என் கண் அசைவை புரிந்து கொண்டு செயலாற்றுபவர் எ.வ.வேலு என கலைஞர் கூறுவார். இப்போது எனக்கும் அதே போன்ற செயல்மிக்க அமைச்சராக எ.வ.வேலு செயல்பட்டு வருகிறார். எத்தனை வேலை கொடுத்தாலும் சிறப்பாக செயல்படுத்தி முடிப்பவர் எ.வ.வேலு.
கலைஞர் நூற்றாண்டு நினைவு நுலகம் ஆகட்டும், கலைஞர் கோட்டம், கலைஞர் ஜல்லிக்கட்டு மண்டபம், கலைஞர் நினைவிடம் ஆகியவற்றை பொதுப்பணித்துறை அமைச்சர் எ,வ,வேலு தான் பார்த்து பார்த்து வடிவமைத்தார். அவை யாவும்அவரது திறமையை வெளிக்காட்டக்கூடிய பணிகளாகும்.
"தாய் காவியத்தை தமிழ் வடிவில் தீட்டிய கலைஞருக்கு தமிழோவியம் தீட்டியிருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு. எனக்கு தந்தை மட்டுமல்ல, தாயுமாகவும் இருந்தவர் கலைஞர்¢. எனக்கு மட்டுமல்ல, லட்சோபலட்சம் பேருக்கு தாயாய், தந்தையாய் இருந்தவர் கலைஞர்.
புத்தகத்தின் உள் இருக்கும் தலைப்புகளே புத்தக தலைப்புகள் போன்றுள்ளன. புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வரலாற்று சம்பவங்களை படித்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. கலைஞரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய அனுபவங்கள் அனைத்தும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
கலைஞரின் வரலாறு மட்டுமல்ல, கழகத்தின் வரலாறும் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இனம், மொழி, மாநில உரிமைகளுக்காக உழைப்பதே கலைஞருக்காக செலுத்தும் அஞ்சலி.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினிகாந்திற்கு நன்றி. என்னை விட வயதில் மூத்தவர் ரஜினி அவர் அறிவுரையை ஏற்கிறேன். பயப்பட வேண்டாம்.
நான் என்றும் கவனமாக இருப்பேன். நீங்கள் மனம் திறந்து பாராட்டியதற்கு நன்றி. ரஜினிகாந்த், என்.ராம் உள்ளிட்டோரும் கலைஞரின் உடன் பிறப்புகள் தான் என்று முதல்வர் ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.
ரஜினிகாந்த்
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் ரஜினி, "இப்போதுதான் அரசியலில் நுழைந்து கடினமான உழைத்து, பேச்சில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி கொண்டு, மக்கள் மத்தியில், தொண்டர்கள் மத்தியில் அருமையான, பெயர், புகழ் பெற்று, அரசியலில் தனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என நிரூபித்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
ஏவி விட்டால்தான் எல்லோரும் வேலை செய்கிறார்கள். ஆனால் ஏவி விடாமலே வேலை செய்பவர் எ.வ.வேலு. இதனை நான் சொல்லவில்லை. கருணாநிதி சொன்னார். கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. உலகத்தில் யாருக்கும் இப்படி கொண்டாட மாட்டார்கள். மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல வேலைகளை கடந்து முதல்வர் தலைமை தாங்கி நடத்தி இருக்கிறார்.
தாய்க்கு நிகர் தலைவர் முத்தமிழறிஞர் அவர்களின் சிறப்புகளை பேசும் “கலைஞர் எனும் தாய்” நூலினை வெளியிட்டார் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்! pic.twitter.com/Mj5gnkruCI
— DMK (@arivalayam) August 24, 2024
மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆன பிறகு, அவர் சந்தித்த எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார். இது அவரது ஆளுமையை வெளிப்படுத்தும் விஷயம். முதல்வர் பதவியை கட்டிக் காக்க பக்கத்து மாநிலங்களில் எத்தனை கஷ்டப்படுகிறார்கள் என்பது நமக்கு தெரியும். ஆனால், அதனை சாதாரணமாக கையாள்கிறார் ஸ்டாலின். பள்ளியில் புதிய மாணவர்களை சமாளிப்பது எளிது. ஆனால், பழைய மாணவர்களை சமாளிப்பது கஷ்டம். இங்கே ஏகப்பட்ட பழையவர்கள் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் சமாளிப்பது சாதாரண விஷயமல்ல. துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர் அவர். அந்த வகையில் ஸ்டாலினுக்கு எனது ஹாட்ஸ் ஆஃப்.
'லால் சலாம்' படத்துக்காக நான் திருவண்ணாமலை சென்றிருந்தபோது, எ.வ.வேலு கல்லூரியில் தான் தங்கினேன். மிகச் சிறப்பான அரவணைப்பு கிடைத்தது. அவருக்கு கைமாறாக என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை.
நல்லவேளை இந்த புத்தக விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
கருணாநிதியின் அரசியல் வாழ்க்கை எல்லோருக்கும் தெரியும். அண்மையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கே, கருணாநிதி குறித்து அரைமணி நேரம் பேசினார். அது அவர் மட்டும் பேசியிருக்க மாட்டார். மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கும்.
எல்லாராலும் பாராட்டப்பட்ட அபூர்வமான மனிதர் அவர். ஒரு சிலர் தான் சமூகத்துக்கு, இனத்துக்காக போராடி பாடுபடுவர்கள். அதில் கருணாநிதி முக்கியமானவர். அவர் சந்தித்த சோதனைகள், விமர்சனங்களை வேறு யாராவது எதிர்கொண்டிருந்தால் காணாமல் போயிருப்பார்கள்.
விமர்சனங்கள் தேவை. அவை மழை போல இருக்க வேண்டும். புயல் போல இருக்கக் கூடாது. புயல் போல இருந்தால் மரங்களே சாய்ந்துவிடும். ஆனால் கருணாநிதி ஆலமரம். வேர் மிகவும் வலுவானது. உடன்பிறப்புகள் என்ற அவரது வேர்கள் மிகவும் வலிமையானவை.
12 வருடம் ஆட்சியில் இல்லாவிட்டால் கூட கட்சியை காப்பாற்ற முடியுமா? 5 வருடம் இல்லாவிட்டாலே திண்டாடுகிறார்கள். கருணாநிதி இறந்த பிறகு அவரது புகழ் வளர்ந்துகொண்டேயிருக்கிறது. அவர் குறித்து படம் எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். விமர்சனம் செய்யுங்கள். ஆனால், யார் மனதையும் நோகடிக்காதீர்கள்.
கருணாநிதி 2 தருணங்களில் மட்டும் சோகமாக இருந்ததை பார்த்துள்ளேன். ஒன்று முரசொலி மாறன் அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த தருணம். இரண்டாவது தருணம், ராஜ்குமாரை வீரப்பன் கடத்தி சென்றபோது, தலைமை செயலகத்தில் அவரை சந்தித்தபோது சோகமாக இருந்தார்.
அரசாங்கத்தையும், அரசையும், லஞ்சம் தொடர்பாக விமர்சித்த படம் 'சிவாஜி'. அது குறித்து தெரியும் கருணாநிதி வந்து பார்த்தார். படத்தை பார்த்து கருணாநிதி சொன்னார், 'நமக்கும் இதெல்லாம் ஒழிக்க வேண்டும், நல்லது செய்ய வேண்டும் என ஆசை' என்று பெருமூச்சு விட்டார் என்று ரஜினிகாந்த் பேசினார்.