கடைசிவரை பிடிகொடுக்காத அதிமுக! பாமக-வை சேர்த்துக்கொள்ள முயலும் பாஜக!

கடைசிவரை பிடிகொடுக்காத அதிமுக! பாமக-வை சேர்த்துக்கொள்ள முயலும் பாஜக!

  ம.பா.கெஜராஜ், 

 வட மாநிலங்களில் இந்தியா கூட்டணி சார்பில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில், இந்தியா கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சிகளை இழுத்து புதிய கூட்டணிக்கு முயன்று வரும் பா.ஜ.க. பீகார், மகாராஷ்டிரா, அரியானா ஆகிய மாநிலங்களில் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் திணறி வருகிறது.   

இந்நிலையில் தமிழகத்தில் அதிமுகவை  கூட்டணிக்குள் ரீ ஜாய்ன்ட் செய்ய பாஜக மேலிடம் முயன்று வருகிறது. அதற்கு ஏற்றார் போல ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரைக் கூட கூட்டணியில் சேர்க்காமல் அவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளனர்.

அதேநேரம், பிரதமர் மோடி நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமியின் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டு எண்ணுக்கு தொடர்பு கொண்டார். டெல்லியில் இருந்து அழைப்பு என்பதால், பழனிசாமி லைனில் வர மறுத்து விட்டார். மோடியிடம் பேசவும் மறுத்து விட்டதாக சொல்லப்படுகிறது.

  இதனால், மோடி தரப்பில் இருந்து அதிமுக மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுமான 2 பேரை தொடர்பு கொண்டு, நேற்று மாலை 6 மணிக்குள் அதிமுக கூட்டணி குறித்த முடிவை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதுவரைதான் காத்திருப்போம். அண்ணாமலைதான் உங்களுக்கு பிரச்னை. இதனால் மோடியே தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டதால் கூட்டணிக்கு நாங்கள் வருகிறோம் என்று வெளிப்படையாக அறிவியுங்கள். மாலைக்குள் கூட்டணிக்கான சாதகமான முடிவை தெரிவிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

   மோடியின் இந்த தகவலை எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக மூத்த தலைவர்கள் 2 பேர் தெரிவித்தனர்.  இப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்தால், நாமும் அழிந்து விடுவோம். நம் மீது மக்களுக்கு நம்பகத்தன்மை இல்லாமல் போய்விடும். இதனால் துணிந்து முடிவு எடுத்துள்ளோம். அதில் பின்வாங்கா மாட்டோம் என்று உறுதியான முடிவை அவர்களிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து விட்டார். இந்த தகவலை பாஜக மேலிடத்தில் நீங்களே கூறிவிடுங்கள் என்றும் திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.

 இந்த தகவல் பாஜ மேலிடத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பாஜகவினர் மாலை 6 மணி வரை காத்திருந்தனர். ஆனால் அதிமுக தலைமையிடமிருந்து புதியதாக எந்த பதிலும் வரவில்லை. இதனால் தனி அணி அமைக்க பாஜக. முடிவு செய்துள்ளது.அந்த அணியில் பாமக இடம்பெறும் என தெரிகிறது. அதிமுகவுடனும் பாமக தொடர்ந்து பேச திட்டமிட்டுள்ளது. எனினும் பாஜக வுடன் கூட்டணி அமைத்தால் அன்புமணிக்கு மந்திரி பதவி தருவதாக டீல் பேசப்பட்டிருக்கிறதாம்.