கபில் சிபிலின் வெளியேற்றம் டிராமா? ராஜ்யசபா சீட்டுக்கான திட்டம்!

ம.பா.கெஜராஜ்,
வீட்டை முற்றுகையிட்டு, முட்டை, தக்காளி வீசி எதிர்ப்பு தெரிவித்த தொண்டர்களிடம், 'காங்., கட்சியை விட்டு வெளியேறப்போவதில்லை' என, கபில் சிபில் கூறியிருந்த நிலையில் அவர் தற்போது பிய்த்துக் கொண்டு வெளியே கிளம்பிவிட்டார். ஆனால் இது ராஜ்யசபா சீட்டுக்கான டிராமா எனவே பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் சோனியாவின் தலைமைக்கு எதிராக, ஜி - 23 எனப்படும், 23 மூத்த தலைவர்கள் ஏற்கனவே போர்க்கொடி உயர்த்தினர்.இந்த அதிருப்தியாளர்களின் குழுவின், மிக முக்கிய முகமே கபில் சிபல் தான். இவர் தான், மூத்த தலைவர்கள் பலரை தன் வீட்டிற்கு அழைத்து, விருந்தளித்து, ஆலோசனை மேற்கொண்டார்.
அவர்களில் இன்னொரு மூத்த அதிருப்தி தலைவரான குலாம் நபி ஆசாத், ஊடகங்களில் பேசுவதை தவிர்த்தபோதிலும், அதிரடியாக பேசி, பரபரப்பை ஏற்படுத்தியவரும் இதே கபில் சிபில் தான்.
அப்படி வீராப்பு காட்டியவர் இடையில் கிட்டத்தட்ட ஓராண்டுகளாக அமைதியாக இருந்தார், வெளியேற்ற கோஷத்தை ஒதுக்கிவைத்திருந்தார்.
இந்நிலையில் ராஜ்யசபா எம்.பி.,யான கபில் சிபில், தன் பதவிக் காலம் ஜூலையில் முடிவடைகிற நிலையில், அவருக்கு சமாஜ்வாதி கட்சி சார்பாக மீண்டும் சீட்டு அளிக்கப்படுகிறது. ஏற்கனவே இவர் 2016ல், உ.பி.,யில் ஆளுங்கட்சியாக இருந்த சமாஜ்வாதியின் ஆதரவுடன் காங்கிரஸ் வேட்பாளராக நின்று ராஜ்யசபா எம்.பி.,யானார்.
தற்போது உத்தர பிரதேசத்தில், காங்கிரசுக்கு இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ளனர். எனவே, நிச்சயம், காங்., சார்பாக நின்று மீண்டும் பதவியை பிடிக்க முடியாது என்கிற சூழலில் அவர் அக்கட்சியிலிருந்து வெளியேறி சுயேட்சை வேட்பாளராகியிருக்கிறார்.
சமாஜ்வாதி கட்சியைப் போலவே ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்காக, உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகளில் கபில் சிபல் ஆஜராகி வருகிறார்.
இதனால், இவருக்கு ராஜ்யசபா எம்.பி., சீட் தர, இந்த மூன்று கட்சிகளுமே தயாராக இருந்தன.
இருப்பினும் கபிலின் சாய்ஸ் சமாஜ்வாதியாகவே இருந்தது.
ஏன்னா சமாஜ்வாதியில் உட்கட்சிப் பூசல்,குடும்ப சர்ச்சை, ஆகியவற்றின் சமாதான புறாவே கபில் தான்.
மேலும், சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமினில் வந்துள்ள கட்சியின் மூத்த தலைவரான அசம் கான், பெரும் கோபத்தில் உள்ளார். அவரை சமாதானப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த அகிலேஷ் யாதவுக்கு இருந்த ஒரே வழி கபில் சிபில்தான்.
இவர் தான் அசம் கானுக்காக லக்னோ உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வாதாடி, அசம் கானை சிறையில் இருந்து வெளியில் கொண்டு வந்தார்.
மற்றொரு பக்கம், மூத்த தலைவர்கள் பலருக்கும் சீட் கொடுப்பதில், காங்கிரஸ் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. எனவே, அவரவர் முயற்சியில் 'சீட்' பெற்று ராஜ்யசபாவுக்கு வந்தால் சரி என, அக்கட்சி கருதுதுகிறது.
கடந்த சில ஆண்டுகளில் ஜோதிராதித்ய சிந்தியா, அமரீந்தர் சிங் என, பல மூத்த தலைவர்கள் வெளியேறியுள்ளனர். கடந்த ஐந்து மாதங்களில் மட்டும், சுனில் ஜாக்கர், ஹர்திக் படேல், அஸ்வினி குமார், ஆர்.பி.என்.சிங் மற்றும் கபில் சிபில் என, முக்கிய தலைவர்கள் ஐந்து பேர் விலகியுள்ளனர்.
ஆனாலும் கூட கபிலின் வெளியேற்றம் ராஜ்யசபா சீட்டுக்கான டிராமா என்பது மட்டும் நிஜம்.