அதிமுக பிரச்சார வாகனப் பேரணி!

கு.அசோக்,
அ.தி.மு.க. மதுரை பொன்விழா எழுச்சி மாநாடு பிரச்சார வாகனத்தை அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி கொடியசைத்து துவக்கி வைத்தார், கூடவே இருசக்கர வாகனங்கள் பேரணியாக சென்றன.
அதிமுக சார்பில் மதுரையில் வருகின்ற 20-ஆம் தேதி பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்து பங்கேற்க செய்ய ஏதுவாக, அதிமுக பொன்விழா மாநாடு பிரசார வாகனம் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் சென்று வருகிறது.
அதன்படி இந்த பிரசார வாகனம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.மேலும் வாகனத்தின் பிரசார பயணத்தை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக மாவட்ட கழக செயலாளருமான சு.ரவி தலைமை வகித்து பிரசார வாகனத்தை கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பச்சைக் கொடி அசைத்து பிரச்சார வாகனத்தின் ஊர்வல பேரணியை தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து அதிமுக சேர்ந்த அனைத்து கட்சி நிர்வாகிகளும் தனது இருசக்கர வாகனங்களில் அதிமுக கொடியினை கட்டியவாறு பிரச்சார வாகனத்துடன் இணைந்து முத்துக்கடை பேருந்து நிலையம் வழியாக அதிமுக மாவட்ட தலைமை அலுவலகம், ஆற்காடு பேருந்து நிலையம் வழியாக மேல்விஷாரம் ஆகிய முக்கிய இடங்களில் சென்று நிறைவு பெற்றது.
நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.