பாதுகாப்பு அசட்டையால் இளம் பெண் பலி! செத்தால் தான் நடவடிக்கையா? வேலூர் பிலிப் ஆவேசம்!!

ம.பா.கெஜராஜ்,
சென்னை, மவுண்ட் ரோடு, ஆயிரம் விளக்கு பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் பழைய கட்டிடத்தை இடித்த போது பெரும் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சிக்கி ஐ.டி.பெண் ஊழியர் பத்ம பிரியா என்பவர் பலியானார்.
பணிக்கு சேர்ந்த ஒரு மாதத்தில் ஐ.டி. பெண் ஊழியர் பத்ம பிரியா இறந்ததை கேள்விப்பட்டு அலுவலக ஊழியர்கள் மற்றும் தோழிகள் கதறினர்.
சுவர் இடிந்து விழுந்த கட்டிடத்தின் அருகில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பத்ம பிரியா பணியாற்றி வந்தார். அவரும், அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் விக்னேஸ் குமார் இருவரும் அந்த வழியாக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பலத்த சத்தத்துடன் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தபோது இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.
சிறிது நேரத்தில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து மீட்பு பணியை முடுக்கி விட்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட இருவரையும் பத்திரமாக மீட்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டன. இதனால் அண்ணா சாலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிட இடிபாடுகளை மீட்பு படையினர் அகற்றி பார்த்தனர். அப்போது ஐ.டி. பெண் ஊழியரான பத்ம பிரியா பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார்.
விக்னேஷ் குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டருந்தது. உடனடியாக பத்ம பிரியாவை ஆம்புலன்சில் ஏற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பத்ம பிரியா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதை கேட்டு அவரது அலுவலக ஊழியர்கள் மற்றும் தோழிகள் கதறி அழுதார்கள்.. கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பத்ம பிரியாவின் சொந்த ஊர் மதுரை உசிலம்பட்டி ஆகும். தந்தை பெயர் பாண்டி முருகேசன். தாய் பாண்டி முருகேஸ்வரி. பத்ம பிரியா ஐ.டி. படிப்பை முடித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருந்தார். இந்நிலையில் தான் அண்ணா சாலையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பத்ம பிரியா கடந்த டிசம்பர் மாதம் வேலைக்கு சேர்ந்து உள்ளார்.
பெற்றோரும் தங்கள் மகளை ஆசை ஆசையாக சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பத்ம பிரியாவின் சித்தி வீடு பல்லாவரம் அருகில் உள்ள பம்மலில் உள்ளது. அங்கு தங்கி இருந்து தான் தினமும் இவர் வேலைக்கு சென்று வந்தார். மெட்ரோ ரெயிலில் ஆயிரம் விளக்கு வந்து அங்கிருந்து சுரங்கப்பாதை வழியாக அலுவலகத்துக்கு நடந்து செல்வதை பத்ம பிரியா வழக்கமாக வைத்திருந்தார்.
இன்று காலையிலும் அது போன்று அவர் நடந்து சென்றார். அப்போது தான் திடீரென இடிந்து விழுந்த கட்டிட சுற்றுச்சுவர் பத்ம பிரியாவின் உயிரை பறித்தது.
இது குறித்து மனித உரிமை காப்பாளரான வேலூர் பிலிப்பிடம் கருத்து கேட்டோம்.
அவர் தெரிவித்ததாவது, பொது இடங்களில் பழமையான கட்டிடங்களை இடிக்கும்போது யாருக்கும் ஆபத்து ஏற்படாத வகையில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஆனால் தனியார் கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் எந்தவித முன் எச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்யாமல் கட்டிடத்தை இடித்துள்ளனர். இதன் காரணமாகவே அநியாயமாக இளம்பெண் ஒருவரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.
வேலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில்கூட ஒரு ஜவுளிக்கடை திறக்கப்பட்டிருக்கு. அவசர கதியில் திறக்கப்பட்ட அந்த நிறுவனத்தின் கட்டிடப்பணிகளும், எக்ஸலேட்டர் அமைக்கும் பணிகளும் இன்னும் நிறைவடையவில்லை. அதற்குள் வியாபாரத்தை துவக்கிவிட்டனர். அங்கு பெரும் அளவில் மக்கள் கூடுகிறார்கள். அது குறித்து சுட்டிக்காட்டி மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
விபரீதம் ஏற்பட்டு உயிர்சேதம் நிகழ்ந்தால் மட்டுமே நடவடிக்கை என்றில்லாமல் வரும் முன் காப்பது நல்லதல்லவா என்றார் பிலிப்.