புலம் பெயர்ந்த இலங்கை தமிழர் நலன்:- 3,510 குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்! திடீரென்று மறுவாழ்வு மையத்துக்குள் சென்றதால் பரபரப்பு!
பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
தமிழகத்திலுள்ள இலங்கை மறுவாழ்வு மையங்களில் குடியிருக்கும் தமிழகர்களுக்காக பல திட்டங்களை அறிவித்த முதல்வர் 3,510குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர்களின் குடியிருப்புக்குள் சென்று ஆச்சர்யமூட்டினார்.
வேலூர் மாவட்டம், வேலூர் கீழ்மொனவூரில் உள்ள அரசு தொழிற் பயிற்சிக் கூட வளாகத்தில் இன்று காலை அரசு விழா நடைபெற்றது. புலம் பெயர்ந்த இலங்கை தமிழகர்களின் மறுவாழ்வுக்காக நடந்த இவ்விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறுபாண்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் வரவேற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆர்.காந்தி, துரைமுருகன், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, இலங்கையிலிருந்து தமிழர்கள் கடந்த 1983 ஆண்டு முதல் தமிழக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள்.
கருணாநிதி ஆட்சிகாலத்தில் கடந்த 97 ஆம் ஆண்டுகளில் முகாம்களிலுள்ள இலங்கை தமிழர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.
அதன் பின் அ.தி.மு.க.ஆட்சியில் கடந்த பத்து ஆண்டுகளாக முகாம் தமிழர்களை அந்த அரசு கண்டு கொள்ளவேயில்லை.
இனி இலங்கை அகதிகள் முகாம் என்று அழைக்கக்கூடாது மறுவாழ்வு மையம் என்றுதான் அழைக்க வேண்டும்.
நம் தொப்புள் கொடி உறவுகளுக்காக கடந்த 97- 98 ஆம் ஆண்டில் திமுக அரசு 3,594 வீடுகளை கட்டிக் கொடுத்தது. அதே போல்
98-99 ஆம் ஆண்டில், 3,826 குடியிருப்புகள் கட்டி தரப்பட்டன. அடிப்படை வசதிகளுக்காக 100 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது இன்னும் அதை செழுமைபடுத்த உள்ளோம்.
அதே போல் அனைத்து முகாம்களையும் பார்வையிட்டு தேவையானவைகளைப் பற்றி அறிக்கை அளிக்க அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இப்படி மறுவாழ்வு மையங்களிலுள்ள 19.40 ஆயிரம் குடும்பங்களில் மிகவும் பின்தங்கியவர்களாக, 7,469 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதற்காக இலங்கை தமிழர் மேம்பாட்டு நிதி என்று ஒதுக்கப்படும்.
இப்பட்டிப்பட்ட மறுவாழ்வு மையங்களிலிருந்து பயிலும் பொறியியல் மற்றும் கலைக்கல்லூரி மாணவர்களுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும்.
இனிமேல் அரிசி மான்ய விலையில் வழங்கப்படாது மாறாக முழுவதும் இலவசமாக அளிக்கப்படும்.
இலவசக் கல்வி அளிக்கப்படும், அதற்காக 4.3.கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
மறுவாழ்வை தேடியுள்ள அவர்கள் கவுரவமாக வாழ சமூக நீதி நிதியாக 6.15 கோடி அளிக்கப்படும்.
5000 திறன் மேம்பாட்டாளர்களை கண்டறிந்து உதவி செய்ய 10 கோடி நிதி ஒதுக்கப்படும்,
மாதந்திர சலுகைகள் தொடரும்,
கேஸ் சிலிண்டர்கள் வழங்கிட 8.6.கோடி அளிக்கப்படும்.
அதற்கு ஏதுவாக சில்வர் பாத்திரங்கள் வழங்கப்படும். அதற்காக 2.42.கோடி வழங்கப்படுகிறது.
கோ ஆப்டெக்ஸ் மூலம் தரமான துணிகள் வழங்கப்படும் அதற்கு 3கோடி அளிக்கப்படும்.
சமூக நலத்திட்டங்களுக்காக 12.41 கோடி வழங்கப்படும்.
தலா, 290 சதுர அடி அளவில் 3,510 வீடுகள் கட்டிக் கொடுக்க இங்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அதே போல் அடிப்படை வசதிகளான குடிநீர், கால்வாய், சாலை போன்றவற்றை மறுவாழ்வு மையங்களில் மேம்படுத்த 30 கோடி அளிக்கப்படுகிறது என்று முதல்வர் பேசினார்.
நிகழ்ச்சியின் முடிவில் பொது மற்றும் மறுவாழ்வுத்துறையின் அரசு செயலாளர் டி.ஜகந்நாதன் இ.ஆ.ப.அவர்கள் நன்றி தெரிவித்தார்.
வேலூரிலுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்துக்குள் சென்ற முதல்வர்.
மேற்படி நிகழ்ச்சி முடிந்த பின்னர் திடீரென்று வேலூர், மேல்மனவூரில் உள்ள இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு மையத்துக்குள் முதல்வர் சென்றார். பாதுகாப்பு அம்சங்களை புறந்தள்ளிவிட்டு அங்கு சென்ற முதல்வரை பார்த்த மக்கள் மகிழ்ச்சியில் வாழ்த்து தெரிவித்தனர்.
இதுவரையில் எந்த முதல்வரும் இங்கு வந்ததில்லை என்று மகிழ்ந்தனர். இது குறித்து இதயசீலன் என்பவர் ரொம்பவே உருக்கமாக தனது மகிழ்வை வெளிப்படுத்தினார்.