பனி பொழிவால் பாக்கிடம் தோற்றோம்:- சொல்கிறார் இந்தியா டீம் கேப்டன் கோலி!

ஜி.எஸ்.மேத்யூராஜ்,
பாக்கிஸ்தானிடம் இந்தியா கிரிக்கெட் அணி தோற்றதற்கு பனி பொழிவே காரணம் என்று இந்தியா டீம் கேப்டன் வீராட் கோலி கருத்து சொல்லியிருக்கிறார்.
நேற்று இரவு நடந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வெகு சுலபமாக தோற்கடித்தது.
துபாயில் நடந்த நேற்றைய போட்டியில் விராட் கோலி டாஸை சுண்டினார்; பாகிஸ்தான் அணித்தலைவர் வென்றார்; பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார்.
டாஸ் வென்றதிலிருந்து இருந்து ஆட்டம் முடியும் வரை, பாகிஸ்தானே முழுமையான ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் முடிவில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று வரலாறு படைத்தது பாகிஸ்தான்.
உலகக்கோப்பை டி20 வரலாற்றிலேயே 150 ரன்களுக்கும் மேற்பட்ட இலக்கை துரத்தி ஒரு விக்கெட் கூட இழக்காமல் வென்ற முதல் அணி பாகிஸ்தான் தான்.
டாஸில் வென்றவுடனேயே முதலில் பனி பொழிவைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார் பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் ஆசம்.
இருந்த போதும், தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணிக்கு அழுத்தம் ஏற்படுத்த முயற்சிப்போம் என்றார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அப்போது பேசும்போது இலக்கை நிர்ணயிக்கும் பணியைச் செய்வதில் மகிழ்ச்சியே. ஆனால் நாங்களும் டாஸ் வென்றிருந்தால் பந்துவீச்சையே தேர்ந்தெடுத்திருப்போம் என்றார்.
ஆனால் ஆட்டம் முடிந்தபிறகு தோல்விக்கான காரணங்களில் பனிபொழிவையும் ஒரு காரணமாக சொன்னார் விராட் கோலி.