சாட்டையை சுழற்றும் கலெக்டர்! ஓட்டம் பிடிக்கும் ஒப்பந்ததாரர்கள்!

சாட்டையை சுழற்றும் கலெக்டர்! ஓட்டம் பிடிக்கும் ஒப்பந்ததாரர்கள்!

 ம.பா.கெஜராஜ்,

 பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வீதி வீதியாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்துவரும் கலெக்டரைக் கண்டு ஒப்பந்ததாரர்கள் ஓட்டம் பிடிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

  வேலூர் மாநகராட்சி மண்டலம் -1 காட்பாடி காந்தி நகர் அக்ஸிலியம் கல்லூரி மற்றும் காட்பாடி வி.ஜி.ராவ் நகரில் உள்ள சாலைகளில் பாதாள சாக்கடை திட்டம் முடிவுற்ற நிலையில், ஒப்பந்ததாரர் மண்ணை அப்புறப்படுத்தாமல்உள்ளார்.

  இந்நிலையில் கனமழை காரணமாக சாலை முழுவதும் சேரும் சகதியமாக ஆனது. அவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார்.

  ஒப்பந்ததாரரின் இந்த பொறுப்பற்ற வேலையை கண்டித்து இதற்கு விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தியும், மேலும் இப்பணிகளை மாநகராட்சி அலுவலர்களை  உடனடியாக ஜேசிபி மூலமாக சகதிகளை அகற்றி சாலையை சீராக அமைக்குமாறும்,  அதற்கான செலவினை ஒப்பந்ததாரரின் கணக்கில் சேர்க்குமாறும் உத்தரவிட்டார்.

  மேலும், மழைநீர் தேங்கி உள்ள சாலைகளை மோட்டார் பம்ப் மூலம் உடனடியாக தண்ணீரை அகற்றவும், தண்ணீர் தேங்கியுள்ள கால்வாயை உடனடியாக சுத்தம் செய்யவும் மாநகராட்சி அலுவலர்களுக்கு பணித்தார்.

  இதனால் அரை குறை ஒப்பந்ததாரர்கள் ஓட்டம் பிடிக்கின்றனர்.

          இதனைத்தொடர்ந்து, காட்பாடி வட்டம் தாராப்படவேடு பகுதியில் உள்ள நரிகுறவர்கள் வசிக்கும் காலனியில் குடியிருப்பில் வண்டறந்தாரங்கல் ஏரியின் நீர் புகுந்துள்ளதை ஆய்வு செய்து அங்கு வசிக்கும் 28 குடும்பங்களை சேர்ந்த 110 நபர்களுக்கு மாற்று இடத்தில் பட்டா வழங்குமாறும், சாதி சான்றிதழ்கள் வழங்குமாறும் வருவாய் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

          இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர், உதவி ஆணையாளர் மண்டலம் -1, மாநகராட்சி மற்றும் வருவாய் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

குறிப்பு:- கலெக்டர் சத்துவாச்சாரி பக்கம் இதே போல் ஒரு விசிட் அடித்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

   ஏனெனில் இங்கு ஒரு சாலைகூட சரியில்லை. அனைத்து சாலைகளுமே தோண்டப்பட்டுள்ளது. பல தெருக்களில் தண்ணிர் சப்ளை துண்டிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது.

  ஓரளவுக்கு முடிக்கப்பட்ட பணிகளும் தரமற்றதாக உள்ளது என்பதால் ஆட்சியர் அவர்களை வருக வருக என்று சத்துவாச்சாரி குடியிருப்புவாசிகள் அழைக்கிறார்கள்.