பல்லை உடைத்துவிட்டார் இன்ஸ்பெக்டர்! அது பல் இல்லீங்க பல் செட் என விளக்கம்!

ம.பா.கெஜராஜ்,
காவல் ஆய்வாளர் சுகுமாரனின் சட்டவிரோத போக்கை கண்டித்து கந்தர்வகோட்டை அனைத்துக் கட்சி கூட்டமைப்பு சார்பாக பேராசிரியர் கோ.ஆறுமுகம் தலைமையில் 14.11.2024 தேதியில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு இருந்த நிலையில், ஆய்வாளர் சுகுமாரன் போராட்டம் நடத்துவதற்கு அனுமதியை மறுத்துவிட்டார்.
ஆறுமுகம் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு நீதிமன்றம் செல்ல இருந்த நிலையில், 13.11.2024 அன்று இரவு 8 மணி அளவில் காவல் ஆய்வாளர் சுகுமாரன் தலைமையிலான போலீஸ் ஆறுமுகத்தின் வீட்டிற்கு சென்று, அத்துமீறி உள்ளே நுழைந்து அடித்து இழுத்துக் கொண்டு காவல் நிலையத்தில் வைத்து ,செல்போனை பறித்து அதில் உள்ள அனைத்து ஆவணங்களையும் அழித்து.கந்தர்வகோட்டை நடுவர் மன்ற நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தி இருக்கிறார்கள்.
காவல் ஆய்வாளர் சுகுமாரனின் சட்ட விரோத போக்கை தெரிந்து கொண்ட நடுவர் நீதிபதி, ஆறுமுகத்தை சொந்த பிணையில் விடுவித்து விட்டார். நீதிபதி சொந்த பிணையில் விட்டதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆய்வாளர் சுகுமாரன். மீண்டும் ஆறுமுகத்தை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அடித்து சித்திரவதை செய்து முகத்தில் குத்தியதில் நாலு பற்கள் உடைத்துவிட்டார்.
தற்போழுது ஆறுமுகம் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து காவல் ஆய்வாளர் சுகுமாரிடம் தொடர்புகொண்டு பேசியதில், ஆறுமுகத்தின் அம்மா விபத்தில் இறந்துவிட்டார். அதை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று ஆறுமுகம் போலீசுக்கு அழுத்தம் கொடுத்தார்.
அதே போல் இப்படிப்பட்ட புகாரை ஏன் எழுப்புகிறாய் என்று கேட்டவர்களை ஆறுமுகம் தாக்கியதன் பேரில் அவர் மீது புகார் வரப்பெற்றோம்.
அதனடிப்படையில் தான் அவரை கைது செய்தோம்.
அவர் பல்லை போலீஸ் உடைக்கவில்லை. அவர் பல் செட் போட்டிருப்பது எல்லோருக்குமே தெரியும். அது தொடர்பாக வீடியோக்கள் உள்ளது என்று அவர் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.