தடுப்பு சுவரை தாண்டி குதித்து ஸ்டாலினுக்கு மைசூர்பாக் வாங்கி கொடுத்த ராகுல்காந்தி!

  டி.இ.முகமது,

 சாலையில் நடுவில் இருந்த தடுப்பு சுவரை தாண்டி குதித்து ஸ்டாலினுக்கு மைசூர்பாக் வாங்கி கொடுத்து நெகிழ்ச்சியடைய வைத்தார் ராகுல்காந்தி.

  இந்தியா கூட்டணி சார்பில் நேற்று நெல்லை மற்றும் கோவையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அவற்றில் ராகுல்காந்தி பங்கேற்றார்.

   கோவை செட்டிப்பாளையம் பகுதியில் நடந்த இந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள், வேட்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

   இந்த பொதுக்கூட்டத்துக்கு முன்னதாக, முதல்வர் ஸ்டாலினுக்காக ஒரு கடையில் இனிப்பு வாங்கும் வீடியோவை ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

  கோவை விமான நிலையத்தில் இருந்து, செட்டிபாளையம் பகுதியில் நடந்த இந்தியா கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கு நேற்று இரவு காரில் சென்ற ராகுல்காந்தி, சிங்காநல்லூர் பகுதியில் சென்றபோது, தனது காரை, சாலையோரம் நிறுத்தி, அங்கிருந்த ஒரு பேக்கரியில் இனிப்புகள் வாங்கினார்.

  அங்கிருந்த ஒரு ஸ்வீட் கடையில், ஒரு கிலோ மைசூர்பாகு, ஒரு கிலோ ஜிலேபி வாங்கினார். இதற்கான கட்டணம் ரூ.750-ஐ அவரே கொடுத்தார். பின்னர், அந்த கடையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள், ராகுல்காந்தியுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். வாங்கிய ஸ்வீட்டை பேப்பர் கேரி பேக்கில் போட்டு பத்திரமாக எடுத்துச்சென்றார். அதை, யாரிடமும் கொடுக்கவில்லை. அவரே கையில் வைத்திருந்தார்.

  சுமார் 5 கி.மீ தூரம் பயணித்து, பொதுக்கூட்ட மேடையை அடைந்ததும், அங்கு அவரை வரவேற்ற, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அந்த ஸ்வீட் பார்சலை கொடுத்து, மகிழ்ந்தார். சாலையின் குறுக்கே இருந்த கான்கிரீட் தடுப்பு சுவரை தாண்டிச்சென்று, ராகுல்காந்தி இனிப்பு வாங்கினார். இது, அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.