அப்பாவிகள் மீதான காவல்துறையின் வன்முறை வெறியாட்டத்தை ஊக்கப்படுத்த முடியாது:- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பல தீர்ப்புகளில் அதிரடியாக சாட்டையை சுழற்றுவதை அறிவோம். அந்த வகையில் அப்பாவிகள் மீதான காவல்துறையின் வன்முறை வெறியாட்டத்தை ஒருபோதும் ஊக்கப்படுத்த முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த நல்லகாமனுக்கு வீட்டை காலி செய்வது தொடர்பாக 1982-இல் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகாரில் நல்லகாமனும் அவரது மனைவியும் காவல்நிலையத்திற்கு சென்றதாகவும் அங்கு அவர்களின் ஆடைகளை களையப்பட்டு காவல்துறையினரால் கொடுமைப்படுத்தப் பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் காவல்துறையினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை, கடந்த 2010-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
அதனைத் தொடர்ந்து இழப்பீடு வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நல்லகாமன் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நல்லகாமனும் வழக்கில் தொடர்புடைய ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரும் உயிரிழந்தனர்.
வழக்கை நல்லகாமனின் மகன் நடத்தி வந்த சூழலில், நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வின் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சந்தேகத்தின் பலனை கருத்தில் கொண்டே உச்சநீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்துள்ளதாகவும் அப்பாவிகள் மீதான காவல்துறையினரின் வன்முறை வெறியாட்டத்தை ஒருபோதும் ஊக்கப்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.
மேலும், நல்லகாமன் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பு போலிசாரின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.