பாக்...பாரதம்...பதிலடி! பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்த இந்தியா!

ம.பா.கெஜராஜ்,
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் ஏப்.22ம் தேதி நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. இதற்கிடையே பிரதமர் மோடி முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட நடவடிக்கையின் கீழ், அதிகாலை 1.30 மணியளவில், இந்திய தரைப்படையும், விமானப்படையும் சேர்ந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதலை நடத்தின.
இந்தியாவில் பயங்கரவாத செயல்களுக்கு உதவிவந்த ஜெய்ஷ் இ முஹம்மது, லஷ்கர் இ தொய்பா தலைவர்களின் தலைமையகங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த தாக்குதலை உறுதிப்படுத்தும் விதமாக, பஹல்காம் தாக்குதலுக்கு நீதி நிலைநிறுத்தப்பட்டுவிட்டதாகவும், ஜெய் ஹிந்த் என்றும் குறிப்பிட்டு இந்திய ராணுவம் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டது. இந்த தாக்குதலில், முப்படைகளின் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், தாக்குதலில் 9 இடங்களில் இருந்த இலக்குகளும் வெற்றிகரமாக தகர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மிகுந்த பொறுப்புணர்வுடன் தாக்குதல் நடத்த வேண்டிய நிலைகளைத் தேர்வு செய்து தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ராணுவத்தின் இந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு 8 மணி முதல் கண்காணித்தார்.
இந்நிலையில் இந்திய வான்பரப்பில் இருந்தவாறு பஹவல்பூர், கோட்லி, முசாபராபாத் பகுதிகளைக் குறிவைத்து இந்திய படைகள் தாக்குதல் நடத்தி இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சரியான நேரம் மற்றும் இடத்தை தேர்வுசெய்து உரிய பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்ததுடன் அதை செய்தும் காட்டி நாங்கள் தீவிரவாதிகளுக்கு ஆதரவானவர்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்.
ஆம் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய குடிமக்கள் 6 பேர் உயிரிழந்தனர்; 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்ட நிலையில், லாகூர், சியால்கோட் விமான நிலையங்களை 48 மணிநேரம் மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
"ஆபரேஷன் சிந்தூர்" - எந்தெந்த இடங்களில் தாக்குதல்?
மிக முக்கியமான இலக்குகளில் ஒன்று பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தலைமையகம் ஆகும். மற்றொரு பெரிய தாக்குதல் சம்பாவுக்கு எதிரே உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள முரிட்கேவைத் தாக்கியது. சாக் அம்ரூ, முரிட்கே, கோட்லி, சியால்கோட், குல்பூர், பாக், முசாபெராபாத், பிம்பர், பஹவல்பூர் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனை உறுதிப்படுத்திய இந்திய ராணுவம், "நீதி நிலைநிறுத்தப்பட்டது. ஜெய்ஹிந்த்." எனப் பதிவிட்டிருந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதலால் ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச், குப்வாரா மற்றும் பாராமுல்லா மாவட்டங்களில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதலை அடுத்து எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே அமைந்துள்ள மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி எல்லையோரத்தில் வசிக்கும் மக்கள் இடம்பெயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் கவனிப்பு: இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூரை பிரதமர் மோடி நேற்றிரவு மூலம் கவனித்து வருகிறார். பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் இணைந்து பிரதமர் மோடி கவனித்தார்.
அமித் ஷா வரவேற்பு: ஆபரேஷன் சிந்தூர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, "பஹல்காமில் அப்பாவி சகோதரர்கள் கொல்லப்பட்டதற்கு இந்தியாவின் பதிலடி. இந்தியக் குடிமக்கள் மீதான எவ்வித தாக்குதலுக்கும் மோடி அரசு சரியன பதிலடி கொடுக்கும் உறுதியோடு இருக்கிறது. பயங்கரவாதத்தை அதன் வேரோடு அழிப்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது." என்று பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி, கார்கே வரவேற்பு: ஆபரேஷன் சிந்தூருக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார். "இந்திய ராணுவத்தை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். ஜெய் ஹிந்த்." என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய ராணுவத்தை நினைத்து பெருமிதம் கொள்கிறோம். பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத கூடாரங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். பாஹல்காம் தாக்குதல் நடந்த நாள் முதலே அரசின் நடவடிக்கைகளுக்கும், ராணுவத்துக்கும் துணை நிற்கும் என்றே காங்கிரஸ் தெரிவித்து வந்துள்ளது. இந்தத் தருணத்தில் தேசிய ஒற்றுமையும், ஒருமைப்பாடுமே அவியம். அதற்கான வழிகாட்டுதலை நம் தலைவர்கள் நமக்கு முந்தையை காலங்களில் காட்டியுள்ளனர். தேச நலனே அனைத்திலும் பிரதானம்." என்று கூறியுள்ளார்.
ட்ரம்ப் கருத்து: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா கட்டவிழ்த்துள்ள நிலையில், "இந்தப் பதற்றம் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறேன்." என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
அதேபோல் ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்தியாவும், பாகிஸ்தானும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்." என்று வலியுறுத்தியுள்ளார்.
அடுத்தது என்ன?
சிந்தூர் தாக்குதலுக்கு அடுத்தது என்ன என்ற பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பதிலடியை எதிர்கொள்வது குறித்து பாதுகாப்பு துறை விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.
அதற்காக மத்திய அமைச்சரவைக் கூட்டமும் நடைபெறுகிறது.
அதேபோல் காஷ்மீர் முதல் உமர் அப்துல்லா தலைமையில் அம்மாநில அமைச்சரவைக் கூட்டமும் தொடங்கி நடைபெற்றது. பாகிஸ்தான் தாக்குதலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீர் மட்டுமல்லாது நாடு முழுவதுமே டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.