பட்டா கத்தியால் வெட்டப்பட்ட லாரி ஓட்டுநர் வேலூரில் பரபரப்பு!

ம.பா.கெஜராஜ்,

எங்கள் மீதே பொய் புகார் கொடுக்கிறீர்களா? என்று ஆத்திரப்பட்ட வாலிபர்கள் லாரி ஓட்டுனரை  கத்தியால் சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு.பட்டா கத்திகளுடன் தப்பி ஓடினர். 

வேலூர் அடுத்த அலமேலுமங்காபுரம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் கண்ணாட்சி (எ) முத்துகிருஷ்ணன். இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகின்றார்.

இன்று அவர் லாரியில் மண் ஏற்றிக்கொண்டு சத்துவாச்சாரி நோக்கி சென்று கொண்டிருந்த போது ஆவின் பால் பண்ணை அருகே சர்வீஸ் சலையில் லாரி பழுதாகியுள்ளது.

இதனால் லாரியை முத்துகிருஷ்ணன் அருகே உள்ள மெக்கானிக் ஷாப் அருகில் நிறுத்தி பழுதை சரி செய்து கொண்டிருந்தனர்.

 அப்பொழுது அதே சர்வீஸ் சாலையில் ஆட்டோவில் வந்த கும்பல் திடீரென முத்துக்கிருஷ்ணனை சுற்றி வளைத்து சராமாரியாக கத்தியால் வெட்டியது. 

இதில் தலையிலும், கைகளிலும் வெட்டுப்பட்ட முத்துக்கிருஷ்ணனின் கைவிரல்கள் துண்டானது அதே நேரத்தில் தாக்குதலை நடத்திய கும்பல் ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றுள்ளது.

இந்த திடீர் தாக்குதலில் நிலை குலைந்து கீழே சாய்ந்த முத்துகிருஷ்ணனை அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதலை செய்தது சக்திவேல், சிவா, அசோக் ஆகிய மூவர் என்று தெரியவந்தது.

மேலும அவர்கள் விசாரித்த போது, வெட்டுப்பட்ட முத்துக்கிருஷ்ணனின் மனைவி கடந்த வாரத்தில் மேற்படி நபர்கள் மீது புகார் ஒன்றை அளித்து, அதன் பேரில் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவாகி இருக்கிறது. 

அவர் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ள சம்பவத்தை அவர்கள் மூவரும் செய்யவில்லை என்பதால் ஆத்திரம் அடைந்து இந்த தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பட்டப்பகலில் பட்டாக்கத்தியுடன் கொலை வெறி தாக்குதல் நடத்திய  சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.