திமுக நிர்வாகி மீது திமுகவினரே புகார்! மறுக்கும் வாணியம்பாடி நகர செயலாளர்!
ம.பா.கெஜராஜ்,
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகர திமுக செயலாளர் சாரதிகுமார் தூண்டுதலில் அவரின் அடியாட்கள் ஆலங்காயம் ஒன்றிய திமுக இளைஞரணி நிர்வாகி சூர்யா என்பவரை கத்தியில் வெட்டி கொலை முயற்சி செய்ததால் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து சூர்யா என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனடிப்படையில் சூர்யாவிடம் பேசினோம். திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பொறுப்பில் உள்ளேன். நான் எனது ஊரில் இருந்து வாணியம்பாடி நகரத்திற்கு 6/12/2022 அன்று மாலை 5.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தேன். அப்போது நேதாஜி நகர் அடுத்த இந்திரா நகர் பகுதியில் எனக்கு தெரிந்த அண்ணன் நின்று கொண்டிருந்தார். நான் வண்டியை திருப்பிக்கொண்டு போய் அவரிடம் பேசினேன்.
அப்போது அங்கு திமுக வாணியம்பாடி நகர செயலாளர் வி.எஸ். சாரதி குமார் அவர்களின் அடியாட்கள் நின்றுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என் தலைவர் சாரதிக்குமாரையே எதிர்க்கிறியா நீ உன்னை காலி செய்ய சொல்லிட்டார் என் தலைவர் என்று மிரட்டினர்.
பெருமாள் பேட்டை பகுதியைச் சேர்ந்த குணா நிர்மல் லாலா ஏரி பகுதியைச் சேர்ந்த லோகநாதன் பகுதியைச் சேர்ந்த நியூ டவுன் பகுதியைச் சேர்ந்த அப்பு பவன் தயாளன் என்பவர்கள் சரமாரியாக தாக்கினார்கள்.
தாக்கியதுடன், வெட்டு கத்தியால் வெட்டியும் காயங்கள் ஏற்படுத்தினரர்கள்
இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த பத்தாம் மாதம் எங்கள் ஊரில் கிரிக்கெட் போட்டி நடத்தினோம். அதி மில் பிளேடு பாய்ஸ் என்ற டீம் தான் வென்றார்கள். நாங்கள் அறிவித்தபடி பரிசுத் தொகையை அளித்துவிட்டோம். அவர்கள் தான் தற்போது என்னை தாக்கியிருக்கிறார்கள்.
இவர்கள் சாரதிகுமாரின் ஆதரவாளர்களான இவர்கள், அவர் பெயரை சொல்லி அவரது தூண்டுதலின் பேரில் தான் என்னை கொலை செய்ய முயன்றார்கள்.
என்னை தாக்கி கொலை செய்ய முயன்றவர்கள் உள்ளூரில் செல்போன் கையுமாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களை வாணியம்பாடி தாலுக்கா போலிசார் கைது செய்யாமல் காப்பாற்றுகிறார்கள் என்றார்.
இது குறித்து வாணியம்பாடி நகர திமுக செயலாளர் வி.எஸ்.சாரதிக்குமாரிடம் பேசினோம்.
எனக்கும் அந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆனால் நடந்தது என்னவென்று எனக்கும் தகவல் வந்தது, சம்பவத்தன்று இந்த பசங்க (தாக்கியதாக கூறப்படுபவர்கள்) பெர்த்டே பார்ட்டி ஒன்றுக்கு போய்விட்டு வாணியம்பாடி எல்லையில் இருந்த போது இந்த பையன் (சூர்யா) பைக்கில் போனவன் திரும்பி வந்துள்ளான்.
அந்த சூர்யா என்பவர் அந்த இடத்தில் இருந்த பசங்களைப் பார்த்து அம்மாவை குறித்து தவறாக பேசியுள்ளார்.
இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சிறு கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது அவ்வளவுதான். அதை ஒருசாரார் பெரிதாக்க முயல்கிறார்கள். மொத்தமே இவுங்களே செட்டப் அது. அப்படி வெட்டுவதாக இருந்தால் அவன் வெட்டுபட்டிருக்கனும், வெட்ட வந்தவனைப் பற்றிதானே சொல்லனும், என்னைப்பற்றி ஏன் சொல்லிக்கொண்டிருக்கனும். அவர்கள் யார் என்று எனக்கு தெரியும். சொந்த பிரச்சனைக்கு முன்விரோதம் கொண்டு அடிச்சுக்குவாங்க? அதுக்கு நான் பதில் சொல்லனுமா? பதவி பிரச்சனையா அல்லது வேறு ஏதாகிலும் பிரச்சனையா?
ஊருக்குள்ள இரண்டு குரூப் அடித்துக் கொண்டால் பதில் சொல்லனுமா அதுக்கு? சொந்தங்களுக்குள் பிரச்சனையால அடிச்சிக்கிட்ட அதற்கு நான் என்ன பண்ண முடியும்? கிழே விழுந்தால் கூட பழி போடுவாங்க போலிருக்கு?
அடிச்சிக்கிட்டாங்க எதுக்காக அடிச்சிக்கிட்டாங்கன்னு சொல்லனுமா இல்லையா? அவன் என்ன நகர செயலாளர் பதவியா கேட்டுட்டான் நான் அவனை அடிக்க சொல்றதுக்கு? நான் அவனை பார்த்ததுகூட கிடையாது, ஆரம்பத்திலிருந்து என் மீது வீண்பழி சுமத்துறாங்க அதுல ஒன்று இது என்றார்.
இதுகுறித்து உள்ளூரில் விசாரித்த போது கடந்த பத்தாம் மாதம் நடந்த கிரிக்கெட் போட்டியே இதற்கு காரணம் என்றும் குறிப்பாக திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜ் தரப்பில் நடத்தப்பட்ட கிரிக்கெட் டீமில் சாரதிக்கு வேண்டப்பட்ட பிளேட் பாய்ஸ் குரூப் வென்றது.
அப்போது ஏற்பட்ட சிறு சலசலப்பினால் இந்த பிரச்சனை பெரியதாகி கொண்டே போகிறது என்கிறார்கள்.
தற்போது போலீசார் அமைதி காக்கும் நிலையில் சூரியா தரப்பில் மாவட்ட ஆட்சியரிடம் அவரது தாய் மற்றும் உறவினர்கள் புகார் அளித்து வருகிறார்கள்.