கன்னியாகுமரிவரை மனித சங்கிலி!தமிழக அரசை மிரட்டும் ஜாக்டோ ஜியோ!

க.பாலகுரு
எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் கன்னியாகுமரிவரை மனித சங்கிலி போராட்டம் நடத்துவோம் என தமிழக அரசை ஜாக்டோ ஜியோ மிரட்டியிருக்கிறது.
திருவாரூரில் ஜாக்டோ ஜியோ வாழ்வாதார உரிமை மீட்பு மாவட்ட போராட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றது.
திருவாரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட முப்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 5ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என திருவாரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெற்ற போராட்ட ஆயத்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாரூர் தனியார் பள்ளியில் ஜாக்டோ ஜியோ திருவாரூர் மாவட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்ற வாழ்வாதார உரிமை மீட்பு மாவட்ட போராட்ட ஆயத்த மாநாடு கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் முன்னிலையில் நடைபெற்றது தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது..
சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சரண்டர் விடுமுறை மற்றும் தொகுப்பு ஊதிய முறையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதை எதிர்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மார்ச் 5ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .
வரும் பட்ஜெட் கூட்டத் தொடருக்குள் தமிழக அரசு தீர்வு ஏற்படுத்தப்படாவிட்டால் இரண்டு லட்சம் அரசு ஊழியர்கள் -ஆசிரியர்கள் இணைந்து சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ மாநில உயர்நிலைக் குழு உறுப்பினரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில தலைவர் ரவி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.