தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பதைவிட அரசு பள்ளிகளில் சேருங்கள்! ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் பேச்சு!

Ma.ba.Gajaraj,
தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பதை தவிர்த்து, அரசு பள்ளிகளில் சேருங்கள் என்று திருப்பத்தூர் ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் அவர்கள் பேசினார்!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டம் நாயணசெருவு கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 254 பயனாளிகளுக்கு ரூ.13.06 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.க.தேவராஜி அவர்கள் முன்னிலையில் வழங்கினார்கள்.
அப்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் நலனுக்காக என்னுயிர் காப்போம், மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். பொதுமக்கள் அனைவரும் அனைத்து துறை சார்ந்த பல்வேறு திட்டங்கள் குறித்து அறிந்து கொண்டு திட்டங்களில் இணைந்து பயனடைய வேண்டும். ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், ஜல்ஜீவன் மிஷன், சாலை அமைக்கும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பொது மக்களின் அன்றாட வாழ்வில் உடல் உழைப்பு குறைவதாலும் கொழுப்பு சத்து மிகுவதாலும் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் அதிகரித்து வருகிறது. ரத்த அழுத்தத்தினால் மிக அதிக பாதிப்புகள் ஏற்பட்டு மாரடைப்பு வரை ஏற்படக்கூடும். மக்கள் அதனை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு சர்க்கரை நோய் ரத்த அழுத்தம் நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அனைவரும் பயன்படுத்திகொண்டு நலமோடு வாழ வேண்டும்.
தமிழக அரசு பள்ளிகளில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் உள்ளனர். எனவே அனைவரும் தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதை தவிர்த்து, அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும். தமிழ் வழியில் கல்வி மாணவர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான. ஆங்கிலம் எங்கே வேணாலும் கற்றுக் கொள்ளலாம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் ஏராளமான சாதனைகளை புரிந்து வருகின்றனர். எனவே அனைவரும் தனியார் பள்ளியை தவிர்த்துவிட்டு அரசு பள்ளிகளை நாட வேண்டும். இம்மாதத்தில் இருந்து நியாய விலை கடைகளில் செறிவூட்டபட்ட அரிசி வழங்கப்பட உள்ளது. அதிக அளவிலான இரும்பு சத்து, நரம்புகளுக்கு சக்தியும் சரியான வளர்ச்சியும் இந்த அரிசியின் மூலம் கிடைக்கப்பெறும்.
மேலும் மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் தனி கவனம் செலுத்தி பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அவர்களது குறைகளை கேட்டறிந்து 42 அட்டவணைகளில் அவர்களது விவரங்களை சேகரித்துள்ளோம். மேலும் யூடிஐடி எனப்படும் சிறப்பு தேசிய அடையாள அட்டைகளை வழங்கி வருகிறோம். இது பிளாஸ்டிக் அட்டையாக வழங்கப்படுகிறது. ஒரு முறை தொலைந்து விட்டால் எங்கு பேணாலும் இந்த அட்டைகளை திரும்ப பெறலாம். இதன் மூலம் தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை பெற முடியும். இந்த கிராமத்தை பொருத்தவரையில் எட்டு நபர்கள் மட்டுமே பெற்றுள்ளார்கள். அனைத்து வருவாய் கிராமங்களிலும் இதற்காக முகாம்கள் நடத்தப்பட்டு அவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. இந்த வாய்ப்பினை மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.
பின்னர் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் நாயணசெருவு கிராமத்தில் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவருகின்ற பேருந்து பயணியர் நிழற்குடை பணி, ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ22.25 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டுமான பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இம்முகாமில் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இலட்சுமி, உதவி ஆணையர் கலால் திருமதி.பானு, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் திரு.என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் (பொ) திரு.முத்தையன், வேளாண்மை இணை இயக்குனர் திருமதி.பாலா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.ஜெயக்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.பாலாஜி, தாட்கோ மாவட்ட மேலாளர் திருமதி.இராஜஸ்ரீ, பழங்குடியினர் நல திட்ட அலுவலர் திருமதி.கலைச்செல்வி, உதவி திட்ட அலுவலர் திரு.முருகேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.சத்தியவாணிசாமுடி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் திரு.ஆனந்தன், திரு.சந்தோஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் (நாயணசெருவு) திருமதி.அஷ்வினி, திருமதி.தமிழ்மணி, திருமதி.அனிதா, அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.