உயர்நீதிமன்ற உத்தரவை வைத்து டிராமா போடும் அரசு அதிகாரிகள்!

ஜி.சாந்தகுமார்,
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, கண் துடைப்புக்காக நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி அதிகாரிகள் டிராமா போட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், பேரம்பாக்கம், பேருந்து நிலையம் அருகே நீர்நிலை பகுதிகளை ஆக்கிரமித்து பலதரப்பட்ட கடைகளும், சாலையோரம் இயங்கி வந்த பழக்கடை, பூக்கடை என 50க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந்தன.
இந்நிலையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை வருவாய் துறையினர், போலீசார் பாதுகாப்புடன், கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி அகற்றும் பணி மேற்கொண்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வணிக நிறுவனங்களை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேற்படி ஒருநாள் மட்டும் நடந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி அதன் பின் ஆறு மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஏற்கனேவே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பகுதியில் தற்போது பயன்பாட்டில் உள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, மாவட்ட கலெக்டர், பேரம்பாக்கம் பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாவட்ட கலெக்டர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் பலதரப்பினரிடமிருந்து எழுந்துவருகிறது.