எடப்பாடி அதிமுக பாஜக டிஷ்யூம் டிஷ்யூம்!

தி.லூக்காஸ்,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறார்கள். பா.ஜனதா யாருக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவெடுக்க முடியாமல் திணறுகிறது. இந்நிலையில் பா.ஜ.க.வை எடப்பாடி பழனிசாமி அணி ஓரம்கட்டி ஆடவைத்திருக்கிறது.
அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி என்று தான் பெயர். அ.தி.மு.க.- பா.ஜனதா இடையே ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் அந்த பெயரையே எடப்பாடி டீம் தூக்கிவிட்டது.
இது பா.ஜ,வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில் பா.ஜனதாவின் முடிவுக்கு எடப்பாடி தரப்பு காத்திராமல் வேட்பாளர் அறிவிப்பு, பணிமனை திறப்பு என்று அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சென்றனர். தேர்தல் பணிமனையில் வைக்கப்பட்ட பேனரில் அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று அறிவிப்பு பளிச்சிட்டது பலரது புருவங்களை உயர்த்தியது.
அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி என்று தான் பெயர். கூடுதலாக `முற்போக்கு' என்ற வார்த்தையை இணைத்து பேனர் வைக்கப்பட்டது.
வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பு வரை பிரதமர் மோடி படம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் தான் பேனர் வைக்கப்பட்டிருந்தது. நேற்று தான் அதிரடியாக மோடி படம் இல்லாமல் கூட்டணி பெயரையும் மாற்றி புதிய பேனர் வைக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி கொடுத்த இந்த அதிர்ச்சி வைத்தியத்தால் பா.ஜனதா கலங்கிப்போய் விட்டது. தகவல் அறிந்ததும் பா. ஜனதா தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க. மேலிட தலைவர்களுடன் போனில் பேசி இருக்கிறார். அப்போது தனது அதிருப்தியை வெளியிட்டு இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து நேற்று மாலையில் அந்த பேனரில் முற்போக்கு என்பது கருப்பு ஸ்டிக்கரால் மறைக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி என்று மீண்டும் இடம் பெற்று இருந்தது. பின்னர் இரவோடு இரவாக புதிய பேனர் தயார் செய்து வைக்கப்பட்டது. அதிலும் மோடி படம் இடம் பெறவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணி என்பதற்கு பதிலாக `அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி என்ற பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
எனவே அ.தி.மு.க.- பா.ஜனதா இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் இன்னும் நீங்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.