நடிகர் விஜய் உருக்கம்...! என் போட்டோவை வைத்து தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு வாழ்த்துக்கள்!கடவுளை பார்க்க முடியாது:- அப்பாவை பார்க முடியும்!!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,
என் போட்டோவை வைத்து தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு வாழ்த்துக்கள், கடவுளை நாம் பார்க்க முடியாது ஆனால் அப்பாவ பார்க்க முடியும் என்று நடிகர் விஜய் பேட்டி ஒன்றில் உருக்கமாக தெரிவித்தார். பத்து ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய் அளித்த நேர்காணலில் இப்படி தெரிவித்தார். மேலும் மகன் சஞ்சய் நடிகராக வருவாரா என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர் ஆண்மீகம் உள்ளிட்டவைகள் குறித்தும் பேசினார்.
இளைய தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதிக்கு திரைக்கு வரவுள்ள நிலையில், அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக நேர்காணல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒளிப்பரப்பானது. பேட்டியை பீஸ்ட் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தொகுத்து வழங்கினார்.
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி இருக்கும் பீஸ்ட் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.
பேட்டியின் விவரம் வருமாறு:-
கேள்வி: பேட்டி கொடுத்து நீண்ட நாள் ஆகிடுச்சு அதுக்கு என்ன காரணம்?
பதில்: நேரம் எல்லாம் இருக்கு ஒரு தடவை ஒரு நேர்காணல் கொடுத்தேன் அப்போ அவங்க எழுதுனது, படிக்கும் போது வேற மாதிரி இருந்துச்சு. சிலர் சொன்னாங்க நேர்காணல் படிக்கும் பொழுது தெனாவட்டா இருந்த மாதிரி இருந்துச்சுனு. அதான் 10 வருஷம் ஆகிடுச்சு. இப்போ மொத்தமா பேசிடுறேன். இந்த காரணத்தால தான் பேசாம இருந்தேன். நான் யாரையும் தப்பா சொல்லவில்லை.
கேள்வி: எப்போழுதும் ஆடியோ வெளியீடு இருக்கும் இப்போது அது இல்ல. பீஸ்ட் எப்படி இருக்கும்னு நினைக்குறீங்க?
பதில்: படம் வந்த பிறகு தான் தெரியும். என் படத்தை பத்தி நானே என்ன சொல்றதுனு தெரியல. சில படம் கிளிக் ஆகுது சில படம் அப்படி ஆகவில்லை. சில படம் கதை கேட்கும் போது நல்லா இருக்கும். சில படம் ஒர்க் ஆகாது. . நான் ஒன்னு சொல்லி அவங்க வந்து திட்டுறத்துக்கா. கண்டிப்பா நல்லா இருக்கும்னு நினைக்குறேன்.
கேள்வி: பூஜா - அனிருத் பத்தி சொல்லுங்க?
பதில்: அவங்க பயங்கர புரொப்பஷனல் அவங்க நல்லா கஷ்டப்பட்டு நடிச்சிருக்காங்க நல்லா வந்து இருக்கு. அனிருத் நல்ல பீக்ல இருக்காரு. எனக்கு எதாவது ஒன்னு பண்ணி தினமும் அனுப்பிக்கிட்டே இருக்காரு. பீஸ்ட் மோட் அனுப்புனாரு நல்லா இருக்கு. அனிருத் கிட்ட கடின உழைப்பு இருந்துகிட்டே இருக்கு.
கேள்வி: உங்கள இன்னும் நல்லா தெரிஞ்சிக்கனும். நீங்க எதுக்கு ரியாக்ட் பண்ணுவீங்கனு புரிஞ்சிக்கவே முடியல? நீங்க எந்த விஷயத்துக்கு பயங்கர எமோஷ்னல் ஆவீங்க?
பதில்: கோவம் வரும் ஆனா ரியாக்ட் பண்ண மாட்டேன். நம்ப எடுக்குற நிறைய முடிவு கோவத்துல எடுக்குறது. யோசிச்சு முடிவு எடுங்க பொறுமையா இருங்க. டேக் இட் ஈசி.
கேள்வி:நீங்க ஜார்ஜியாவுல சர்ச்சுக்கு போனத பார்த்தேன், உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா?
கடவுள் நம்பிக்கை இருக்கும். துப்பாக்கி படப்பிடிப்பின் போது தேவாலயத்திற்கும், கோவில்களுக்கும், அமீன் பீர் தர்காவிற்கும் சென்றிருக்கேன். எல்லா இடங்களிலும் தெய்வீக உணர்வை உணர்ந்திருக்கிறேன். என் அம்மா ஒரு இந்து, என் அப்பா ஒரு கிறிஸ்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நான் எங்கு செல்ல வேண்டும் அல்லது செல்லக்கூடாது என்று ஒருபோதும் கட்டுப்படுத்தாத குடும்பத்தில் வளர்ந்தேன். நானும் என் குழந்தைகளுக்கும் இதைத்தான் கற்றுக்கொடுக்கிறேன் என்றார்.
கேள்வி: அம்மா, அப்பா உறவுகள் எப்படி இருக்க வேண்டும்? இதை பத்தி உங்க கருத்து என்ன?
பதில்: அப்பா ஒவ்வொரு குடும்பத்துக்கும் மரத்தோட வேர் மாதிரி. அப்பாக்கும் கடவுளுக்கும் ஒரு வித்யாசம் தான். கடவுள் நம்ம பார்க்க முடியாது, அப்பாவ பார்க்க முடியும் அது தான் வித்தியாசம்.(அண்மைக்காலமாக தனது தந்தையுடன் விஜய் பேசுவதில்லை என தகவல் வெளியான நிலையில், தந்தை குறித்து கூறி அவர் நெகிழவைத்தார்)
கேள்வி: உங்க பையன் சஞ்சய் நடிப்புல எப்போ பார்க்கிறது?
பதில்: நான் அவனை எதுவும் சொல்லமாட்டேன். அவங்களுக்கு புடிச்சதை பண்ணட்டும். அவன் தான் எல்லாத்தையும் முடிவு பண்ணனும். ஒரு தடவை பிரேமம் பட இயக்குனர் வந்தாரு எனக்கு தான் கதை சொல்ல வராருனு நினைச்சன். உங்க பையன் கிட்ட கதை சொல்லனும் சொன்னாரு, கதை எனக்கு ரொம்ப பிடிச்சுது. சஞ்சய் ஒத்துக்கனும் அத பண்ணனும்னு நினைச்சேன். ஆனா அவன் டைம் கேட்டான். அவன் எது பண்ணாலும் எனக்கு சந்தோஷம்.
கேள்வி: 20 வருஷம் டாப்ல இருக்கீங்க எப்படி இதை பண்றீங்க. உங்க எல்லாம் விஷயத்துலயும்
ரசிகர்கள் உங்க கூடவே இருக்காங்க உங்களை பாதுகாக்குறாங்க. அவங்களுக்கு நீங்க என்ன சொல்லுவீங்க?
பதில்: என் பேன்ஸ் வேற மாதிர . ஒரு உதாரணம், கிரிக்கெட் மேட்ச் நடக்குது ஆடும் பொழுது 6 அடிக்கணும்னு நினைப்பாங்க, பீல்டிங் பண்ணும் போது அவுட் ஆகணும்னு நினைப்பாங்க அந்த மாதிரி தான் பார்த்து நடந்துக்கனும்.
கேள்வி: இத்தனை படத்துல, உங்க வாழ்க்கையோட கனெக்ட் பண்ணிக்கும் கேரக்டர்?
பதில்: போக்கிரி கொஞ்சம் பீஸ்ட் கொஞ்சம் மொத்தத்துல நண்பன் கேரக்டர் மாதிரி. படத்துல பேசுற ஸ்டைல் தான் சொல்றேன்.
கேள்வி: பீஸ்ட் வெற்றிக்கு பிறகு எந்த ஊருக்கு எங்களை கூட்டிட்டு போணும்னு நினைப்பீங்க?
பதில்: அமைதியா ஜன்னல் ஓரத்துல நல்லா பீல் பண்ணி பாக்குற மாதிரி இடம் இருக்கனும். தெருவுல நடந்து போகனும், அவ்வளவு தான்.
கேள்வி: ரொம்ப சாதாரணமா இருக்கீங்க, நீங்க எப்போமே இப்படி தானா?
பதில்: நான் விரும்புறது வெறும் 100 ரூபாய் பிரியாணி தான். இது மாதிரி சாதரணமா இருக்கனும்.
கேள்வி: நாங்க 3 இயக்குனர் இருந்த போட்டோவ நீங்க தான் எடுத்தீங்க, அதை பார்க்கும் போது என்ன தோணுச்சு?
பதில்: நீங்க முக்கியமா எதாவது பேசுவீங்கனு நினைச்சேன். அடுத்த படத்துக்கு என்ன சம்பளம் வாங்கலாம்னு பேசிட்டு இருக்கீங்கனு நினைச்சேன்.
கேள்வி: புது வருட உறுதி எடுப்பீங்களா?
பதில்: எப்போதும் எடுப்பேன் அடுத்த நாளே மாறிடுவேன். நமக்கு எல்லாம் அது செட் ஆகாது.
கேள்வி: கதையை எப்படி செலக்ட் பண்றீங்க?
பதில்: 75 சதவீதம் படத்தின் கதை கேட்பேன். எல்லாம் கலந்த ஒரு பேக் இருக்கனும்னு பார்ப்பேன்.
கேள்வி: விஜய்யை, விஜயே நேர்காணல் பண்ணா நீங்க என்ன கேப்பீங்க?
பதில்: இத்தனை வருஷத்துல தமிழ் சினிமாவ உயரத்துக்கு கொண்டு போகுற மாதிரி எப்போ படம் பண்ணுவீங்கனு கேப்பேன்.
கேள்வி: தளபதியில் இருந்து தலைவரா மாறனும்னு விருப்பம் இருக்கா?
பதில்: தளபதியா தலைவனானு ரசிகர்களும் காலமும் தான் முடிவு செய்யும்.
கள்வி: தேர்தல் அப்போ உங்க போட்டோ வச்சு தேர்தல்ல நின்னாங்க அதை பத்தி என்ன நினைக்கிறீங்க?
பதில்: அவங்களுக்கு வாழ்த்துக்கள், நல்லது பண்றவங்க பண்ணட்டும். அவங்க நல்லது பண்றத நான் பின் தொடர்ந்துட்டு தான் இருக்கேன்.
கேள்வி: சினிமாவ தவிர்த்து சமூக விஷயங்களில் எதாவது பண்ணனும்னு நினைப்பீங்களா?
பதில்: சில விஷயங்களுக்கு முன் எச்சரிக்கையா இருக்கணும்னு நினைப்பேன். துப்பாக்கி சூடுல ஒரு குழந்தை இறந்துச்சு, இது மாதிரி நடக்காம இருக்கணும்.
கேள்வி: தேர்தல் அப்போ சைக்கிளில் போனீங்க...! அதுக்கு என்ன காரணம்?
பதில்: எதார்த்தமாகவே சைக்கிளில் சென்றேன் அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. சைக்கிள் இருந்துச்சு அதுல போனேன் வேற எதுவும் இல்ல. நான் சாதரணமா போனேன் அதை இப்படி ஆக்கிட்டாங்க. என் பையன் கேட்டான் என் சைக்கிளுக்கு ஒண்ணும் ஆகலையான்னு.
கேள்வி: எங்கள கூட்டிட்டு கார்ல ரவுண்ட் போனீங்க. அதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?
பதில்: ஜாலியா இருந்துச்சு நல்ல ஒரு பயணம்.
கேள்வி: அடுத்த படம் தெலுங்கு மொழியா தமிழா?
பதில்: தமிழ் படம் தான் தெலுங்குல ரீமேக் பண்றோம் அவ்வளவு தான்.
கேள்வி: ஒரு குட்டி கதை சொல்லுங்க?
பதில்: முதலில் நெல்சன் கேட்டபோது ஸ்டாக் இல்லப்பா என கிண்டலடித்த விஜய், பின்னர் புல்லாங்குழலையும் கால்பந்தையும் ஒப்பிட்டு ஒரு குட்டி ஸ்டோரி ஒன்றை சொன்னார். "புல்லாங்குழலை பார்த்து கால்பந்து கேட்டதாம், உனக்குள்ளையும் காத்துதான் இருக்கு, எனக்குள்ளையும் காத்துதான் இருக்கு. ஆனா உன்னை வாயில் வைத்து முத்தமிடுகின்றனர், என்னை காலில் போட்டு மிதிக்கின்றனர் என்றதாம்.
அதற்கு பதிலளித்த புல்லாங்குழல், நீ உனக்குள் இருக்கும் காற்றை யாருக்கும் தருவதில்லை. ஆனால் நான் எனக்குள் இருக்கும் காற்றை இன்னிசையாக மக்களுக்கு தருகிறேன். அதனால் தான் என்னை அனைவரும் முத்தமிடுகின்றனர் எனச் சொன்னதாம். ஆகையால் நாம் கால்பந்தைப் போல் இல்லாமல் புல்லாங்குழலாக இருந்து அனைவருக்கும் உதவ வேண்டும் எனக் கூறினார் விஜய். இதைக் கேட்ட ரசிகர்கள் குட்டி ஸ்டோரி வேற லெவலில் இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.
கேள்வி: ஒரு பாட்டு பாடுங்க சார்?
பதில்: ஜாலியோ ஜிக்கானா என்ற அழகான பாடலை பாடி நேர்காணலை முடித்துக் கொண்டார்.