பொதுமக்களின் பெட்டிஷன்கள் மீது 21 நாட்களுக்குள் நடவடிக்கை! மத்திய அரசு உத்தரவு! அதிகாரிகள் பின்பற்றுவார்களா?

ம.பா.கெஜராஜ்,
பொதுமக்கள் அளிக்கும் பெட்டிஷன்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற விதி தற்போது உள்ள நிலையில் அதை 21 நாட்களாக குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் ஒவ்வொரு துறையிலும் இனி இந்த புதிய விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுwww.pgportal.gov.inஎன்றபெயரில் குறைதீர்ப்பு மனுக்களுக்கான தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் வாயிலாக பொதுமக்கள் மனுக்களை அளித்து வருகிறார்கள்.
அவ்வாறு அளிக்கப்படும் மனுவின் மீதான நடவடிக்கைக்கு 30 நாட்களுக்குள் என கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
21 நாட்களுக்குள் குறைகளைத் தீர்க்க முடியவில்லை என்றால், சம்பந்தப்பட்டவருக்கு இடைக்கால பதிலை சம்பந்தப்பட்ட துறையோ அல்லது நிர்வாகமோ அளிக்கவேண்டும் என்று மத்திய நிர்வாகசீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்பு துறை(DARPG)தெரிவித்துள்ளது.
மேலும் குறைகள் தீர்க்கப்பட்ட விவரத்தை சம்பந்தப்பட்ட பொது மக்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் மூலமாக அனுப்பவேண்டும் என்றும் புதிய விதிமுறைகளில் மத்திய அரசு கூறியுள்ளது.
மேலும் சம்பந்தப்பட்டவரிடம் இருந்து குறைகள் தீர்க்கப்பட்ட தற்கான பதிலையும், அவரதுகருத்துகளையும் பெறவேண்டும்.
ஒருவேளை குறை தீர்ப்புவிஷயத்தில் சம்பந்தப்பட்டவர் திருப்தி அடையவில்லையென்றால் அவர்கள் மீண்டும் கோரிக்கைமனுவை துறையின் மூத்த அதிகாரிக்கு அனுப்பலாம் என்றும் புதிய விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு துறையிலும் பொதுமக்கள் குறைதீர்ப்புக்காக நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த அதிகாரிகள், பொதுமக்களின் குறைகளை உடனடியாகவும், நியாயமாகவும், திறமையாகவும் நிவர்த்தி செய்வார்கள்.
மேலும், ஒரு துறைக்கு கோரிக்கை மனு வரும்போது, அது தங்கள் அமைச்சகம், துறை, அலுவலகம் தொடர்பானது அல்ல என்று குறிப்பிடக்கூடாது. மேலும் அந்தப் புகாரை சம்பந்தப்பட்ட துறைக்கோ அல்லது அதிகாரிக்கோ மாற்ற முயற்சிக்கவேண்டும்.
நிலுவையில் உள்ள மனுக்களை கண்காணித்தல், திறமையான வகையில் மனுக்களைப் பிரித்தல்,செயல்முறை மற்றும் கொள்கை மேம்பாடுகளுக்கான கருத்துகளை ஆய்வு செய்தல், பிரச்சினைக்கான மூல காரணத்தை ஆராய்தல், புகார்களின் மாதாந்திர தகவல் தொகுப்புகளைத் தயார் செய்தல் ஆகியவை நோடல் அதிகாரிகளின் பொறுப்பாகும்.
அதுமட்டுமின்றி ஒவ்வொரு அமைச்சகம், துறைகளின் சார்பில் முழுமையாக செயல்படும் வகையில், போதிய ஆள் பலத்துடன் குறைதீர்ப்பு மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்பு துறை கூறியிருக்கிறது.
எல்லாம் சரிங்க அரசே...உங்க அதிகாரிகள் இதை செயல்படுத்துவார்களா?