விலங்குகள் மத்தியில் இருப்பிடம்! கல்லூரியை நோக்கி நடைபயணம்!!

விலங்குகள் மத்தியில் இருப்பிடம்! கல்லூரியை நோக்கி நடைபயணம்!!

சபரி.ஈஸ்வரன்,

விலங்குகள் மத்தியில் இருப்பிடம், கல்லூரியைஅ நோக்கி நடைபயணம் என்கிற ரீதியில் ஒரு பெண் நெல்லை மாவட்டத்தில் அசத்தியிருக்கிறார்.

இது பற்றின விவரம் வருமாறு,

 நெல்லை மாவட்டம் அம்பை அருகே, பாபநாசத்தில் இருந்து சுமார் 15 கி.மீ.க்கு மேல் மலைப்பகுதியில் ஒரு கிராமம் இருக்கிறது.  காரையாறு அணையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில், புலி, சிறுத்தை, யானை என வனவிலங்குகள் உலா வரும் அடர்ந்த காட்டுக்குள் இந்த கிராமம் அமைந்துள்ளது.

   இங்கு காணி பழங்குடியினத்தை சேர்ந்த 7 குடும்பத்தினர் அதாவது சிறுவர்கள் உள்பட 24 பேர் மட்டுமே வசிக்கிறார்கள். இவர்களுக்கு கல்வி இல்லாத கடினமான சூழல் உள்ளது.

 இந்த சூழலை தாண்டி கல்லூரி லட்சியத்தை எட்டிப்பிடித்து இருக்கும் அந்த வனக்கிராமத்து முதல் பெண் என்ற பெருமையை அபிநயா பெற்றிருக்கிறார்.

 அவரது தந்தையின் பெயர் அய்யப்பன். அவர் தனது ஒரே மகளை எப்படியாவது பட்டதாரி ஆக்கிவிட வேண்டும் என்ற ஆசைப்பட்டார்.

  அதற்கு பெரிய அடித்தளம் அமைத்து கொடுத்துள்ளார். அந்தவகையில், அபிநயா நெல்லையில் தங்கி 1 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உள்ளார். வக்கீலாக வேண்டும் என்ற ஆசையில் கடந்த ஆண்டு நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் விண்ணப்பித்து உள்ளார். ஆனால் இணையதள வசதி இல்லாததால் கல்லூரியில் சேர்க்கை கிடைக்கும் விவரங்களை அறிந்து கொள்ள முடியாமல் அவரால் படிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

   தற்போது அபிநயாவுக்கு நெல்லை ராணி அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. வரலாறு படிக்க இடம் கிடைத்துள்ளது.

   இதுகுறித்து அபிநயா கூறும்போது, 'எங்கள் ஊரில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. என்னை படிக்க வைக்க பெற்றோர் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். நான் நன்றாக படித்து அவர்களுக்கு பெருமை சேர்ப்பேன்' என்றார்.