அதிமுக பிரமுகர் கள்ளச்சாராய வழக்கில் 51 வது முறையாக கைது!

அதிமுக பிரமுகர் கள்ளச்சாராய வழக்கில் 51 வது முறையாக கைது!

டி.இ.முகமது,

அதிமுக பிரமுகர் கள்ளச்சாராய வழக்கில் 51 வது முறையாக கைது செய்யப்பட்டிருப்பதாக சேலம் மாவட்டம் போலீசார் தெரிவித்துள்ளார்கள். ஏற்கனவே இவர் மீது 3 குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்திருக்கிறது.

  கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 18ம்தேதி பாக்கெட்டில் அடைத்து விற்கப்பட்ட மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 59 பேர் பலியாகினர். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் போலீசார் மதுவிலக்கு வேட்டை நடத்தி வருகின்றனர்.

 அந்த வகையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் ரூரல் இன்ஸ்பெக்டர் பூர்ணிமா தலைமையில் போலீசார் தீவிர ரைடு நடத்தினர். அப்போது, கல்லாநத்தம் பகுதியில் நடத்திய சோதனையில் பிரபல சாராய வியாபாரி சுரேஷ்(எ)சுரேஷ்குமார்(எ) கல்லாநத்தம் சுரேஸ் பிடிபட்டார். 

  அவரிடமிருந்து 40 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. அதிமுகவை சேர்ந்த இவர், ஆத்தூர் கிழக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளராக இருந்துள்ளார். இவர் மீது 50க்கும் மேற்பட்ட சாராய வழக்குகள் உள்ளது. மேலும் வழிப்பறி, அடிதடி, கொலை உள்ளிட்ட வழக்குகளும் இருக்கிறது. கள்ளச்சாராயம் காய்ச்சி வந்ததால் அவர் 3 முறை குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

 அப்போதும், சாராயம் விற்பனை செய்வதை நிறுத்தாத இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் மணப்பாச்சி என்ற இடத்தில் 20 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதும், சாராயம் விற்பனை செய்த பணத்தில் நிலத்தை வாங்கியுள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

  இவர் கல்வராயன் மலையில் மணப்பாச்சி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி அங்கிருந்து கள்ளக்குறிச்சி மற்றும் ஆத்தூர் பகுதிக்கு கொண்டுவந்து விற்பனை செய்துள்ளார். 

 இவர் கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்ததால் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இவருக்கு தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.