அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகின்ற 7-ந் தேதி நடைபெறும்!

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகின்ற 7-ந் தேதி நடைபெறும்!

 ம.பா.கெஜராஜ்,

  அ.தி.மு.க.  மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  அதே நாளில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு, முதல் முறையாக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைமை அறிவிப்பு செய்துள்ளது.

  இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு மூலம் தெரிவித்திருப்பதாவது,

  அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகின்ற 7-ந் தேதி வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகம் எம்.ஜி.ஆர். மாளிகையில், கட்சியின் அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.

 இந்த கூட்டத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பிற மாநில செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

  தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் 7-ந் தேதி நடைபெறும் என தலைமைக் கழகத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.

 நடைபெற உள்ள கூட்டத்தில் மொத்தம் 250 முதல் 300 பேர் வரை பங்கேற்பார்கள் என தெரிகிறது. கூட்டத்தில், அ.தி.மு.க.வை பலப்படுத்துவது குறித்தும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்தும், கூட்டணி குறித்தும் பேசப்பட இருப்பதாக கூறப்படுகிறது.