பொது இடங்களில் தம் அடித்தால் 2,000/-அபராதம்!

டி.முகமது இர்பான்
பொது இடங்களில் தம் அடித்தால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டம் அமலுக்கு வர உள்ளது.
தமிழகத்தில் புகையிலை பொருட்கள் கட்டுப்பாட்டு சட்டம் - 2003 அமலில் இருந்தாலும், அவற்றை அரசு தீவிரப்படுத்ததால், ஆண்டுக்கு 82.38 லட்சம் கிலோ புகையிலைக் கழிவுகள் சேகரிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான அமைப்பின் நிர்வாகி சிரில் அலெக்சாண்டர் கூறியதாவது: தமிழகத்தில், சிகரெட் புகையிலை கழிவுகள் 40.40 லட்சம் கிலோ; பீடி கழிவுகள் 6.07 லட்சம் கிலோ உள்ளிட்ட புகையிலை பொருட்களால் ஆண்டுதோறும் மொத்தமாக, 82.38 லட்சம் கிலோ கழிவுகள் சேகரிக்கப்படுகிறது.
அதன்படி, மொத்த குப்பை சுத்தம் செய்வதில், 10 சதவீத தொகையை, புகையிலை பொருட்களை சுத்தம் செய்ய அரசு செலவிடுகிறது.
அதனால் ஏற்படும் மாசை சுத்தப்படுத்துவதற்கான கட்டணத்தை, பயன்படுத்துவோரிடம் இருந்து வசூலிக்க வேண்டியது அவசியம்.
ஆகவே, பொது இடங்களில் புகையிலை பயன்படுத்துவோருக்கு விதிக்கப்படும் அபராத தொகையை, 200 ரூபாயில் இருந்து, 2,000 ஆக உயர்த்துவதற்கான சட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளது என்றார்.