மணல் திருட்டால் விபரீதம்! தடுப்பணையில் மூழ்கி 7 பேர் பலி! கிராமமே கதறல்!

க.முகில்,
ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டிருக்கும் தடுப்பணை நீரில் மூழ்கி 7 சிறுவர்கள் பலியானார்கள், இது குறித்து விசாரிக்கப்படும் என்று அமைச்சர் எம்மார்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இது பற்றின விவரம் வரும்று,
கடலூர் அருகே நெல்லிக்குப்பம் போலீஸ் சரகம் கீழ் அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில் கெடிலம் ஆறு உள்ளது.
அந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தற்போது கோடை மழை பெய்ததால் இந்த தடுப்பணையில் ஓரளவு தண்ணீர் உள்ளது. எனவே இந்த தடுப்பணையில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள், சிறுமிகள் குளிப்பது வழக்கம்.
இந்நிலையில் இன்று காலை அதே பகுதியை சேர்ந்த பெண் பிரியா, மாணவிகள் மோனிசா, சங்கவி, சுமுதா, காவியா, பிரியதர்ஷிணி, நவி ஆகியோர் தடுப்பணையில் குளிக்க சென்றனர்.
அப்போது அவர்கள் ஆழமான பகுதியில் இறங்கிய போது தண்ணீரில் மூச்சு திணறினார்கள். அப்போது சிறுவர்களில் சிலர் கூச்சலிட்டனர். சத்தம்கேட்டு கிராம மக்கள் திரண்டு வந்தனர். உடனடியாக ஆற்றில் மூழ்கிய 7 பேரையும் மீட்டனர்.
இந்த தகவல் அறிந்ததும் ஏராளமானோர் திரண்டனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வேன் வரவழைக்கப்பட்டது. அந்த வேனில் 7 பேரும் ஏற்றி செல்லப்பட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
ஆனால் சிறுமிகள் உள்பட 7 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அந்த தடுப்பணை பகுதியில் மணல் திருட்டால் பெரிய பெரிய பள்ளம் ஏற்பட்டிருக்கிறது. அந்த பள்ளத்தில் சிக்கிதான் எங்க ஊர் குழந்தைகள் இறந்துள்ளார்கள் என்கிறார்கள்.
இந்நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் உடலுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் நேரில் அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், "7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தடுப்பணை பகுதியில் பள்ளம் ஏற்பட்டது எப்படி என்பது குறித்தும், மண்ணின் தன்மை குறித்தும் விசாரணை நடைபெறும்" என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.