கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படும்! துரைமுருகன் ஆவேச பேச்சு!

கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படும்! துரைமுருகன் ஆவேச பேச்சு!

 ஜி.கே.சேகரன்,

தமிழகத்தில் 9 மாவட்டங்களின் உள்ளாட்சித்தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான உடன் அனைத்து கூட்டுறவு சங்கங்களும் கலைக்கபடும். திமுகவினர் அங்கு அமர வைக்கப்பட்டு 3 ஆண்டுகள் அல்லது இரண்டு ஆண்டுகள் கழித்து கூட்டுறவு சங்கதேர்தலை நடத்துவோம் - ஜோலார்பேட்டையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு.

  திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் கூட்டம் நடந்தது.

  பொதுச்செயலாளரும் நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன்,  வேளாண்துறை அமைச்சர் பன்னீர் செல்வம், உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் நேரு ஆகியோர்  வெற்றி பெறுவதற்கான ஆலோசனை சொன்னார்கள்.

  இதில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசுகையில்,நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஜோலார்பேட்டை மண்ணின் மைந்தனையே மண்ணை கவ்வ வைத்தீர்கள்.

 பணம் அதிகாரம்,மிக்க அமைச்சர்களை மக்கள் தோற்கடித்தீர்கள், நாங்கள் வென்றால் மக்கள் ஆதரவு என்பார்கள், அதிமுகவினர் வென்றால்  100 நாளில் எங்கள் சாயம் போய்விட்டதாக கூறுவார்கள் புலம்புவார்கள்.

  இதில் தோற்றால் அதிமுகவினர் வரும் தேர்தல்களில் நிற்க அச்சப்படுவார்கள். பாராளுமன்றத் தேர்தலிலும் திமுக வெல்லும்.

 ஆகவே திமுகவினர் பொறுமையாக வேலை செய்ய வேண்டும். திமுகவில் ஒரு பதவிக்கு 20 பேர் போட்டியிடுவதாக கேட்கிறார்கள். ஆனால் யாராவது ஒருவரை தான் போட்டியிட வாய்ப்பளிக்க முடியும்.

  இந்த உள்ளாட்சி தேர்தல் இருப்பதால் இதனை கூற முடியவில்லை இருந்தாலும் சொல்கிறேன், உள்ளாட்சித் தேர்தல் முடிவு வெளியானவுடன் பால் வளம்,சர்க்கரை ஆலை உள்ளிட்ட அனைத்து கூட்டுறவு சங்கங்களையும் முதல்வரிடம் சொல்லி கலைப்பேன்.

  பின்னர் தேர்தலை உடனே நடத்தமாட்டோம். திமுகவினர் அழைத்து சென்று சங்கங்களில் அமர வைப்போம். அப்போது தான் அவர்களின் ஆதங்கம் தீரும் அதன் பின் இரண்டு அல்லது மூன்றாண்டுகள் கழித்து கூட்டுறவு தேர்தலை நடத்துவோம் என அமைச்சர் பேசினார்.

  கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகளை பதவிகளை கலைக்கமாட்டோம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசே உறுதிமொழி அளித்துவிட்டு திமுகவின் மூத்த அமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தில் கூட்டுறவு சங்கங்களை கலைப்போம் என பேசியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 திமுகவின் நிலைபாடு இங்கு வேறுபடுவதால் திமுகவினரே குழப்பமடைந்துள்ளனர்