அடுத்த டிஜிபி யார்! டெல்லி விரையும் தமிழக மூத்த அதிகாரிகள்! டி.என்.பி.எஸ்.சி தலைவராகிறாரா சைலேந்திரபாபு!

அடுத்த டிஜிபி யார்! டெல்லி விரையும் தமிழக மூத்த அதிகாரிகள்! டி.என்.பி.எஸ்.சி தலைவராகிறாரா சைலேந்திரபாபு!

 ம.பா.கெஜராஜ்,

   தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு ஜூன் 30- ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை. இதனால் 28ஆம் தேதி அல்லது 30-ம் தேதி காலை புதிய டிஜிபிக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிடும் என கூறப்படுகிறது.

  ஆகவே  தமிழ்நாட்டுக்கு அடுத்த டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று 22.06.2023 டெல்லியில் நடக்கிறது. இதற்காக தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, உள்துறை செயலாளர் அமுதா ஆகியோர் கலந்து கொள்கின்றனர் டெல்லி செல்கின்றனர்.

  சட்டம் ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்ய வேண்டும் என்றால், டிஜிபி அந்தஸ்தில் தகுதியான நபர்களை ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். உள்துறை அமைச்சகம் மூன்று பேரை டிக் அடிக்கும். மாநில அரசு அந்த 3 பேரில் ஒருவரை தேர்வு செய்வார்கள். அதன்படி தமிழக டிஜிபியை தேர்வு செய்யும் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது.

 இதில் மாநில அரசு அளித்துள்ள பெரிய பட்டியலில் சஞ்சய் அரோரா, பி.கே.ரவி, சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன், ஆபாஷ் குமார், டி.வி.ரவிசந்திரன், சீமா அகர்வால், அம்ரேஷ் புஜாரி, ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், அபய்குமார் சிங், கே.வன்னிய பெருமாள் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

  இந்தப் பட்டியலில் தகுதியான மூன்று பேரின் பெயர்கள் இறுதி செய்யப்ட்ட பின்னர் அந்தப் பட்டியல் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்தப் பட்டியலில் உள்ள மூவரில் ஒருவரை தமிழ்நாடு அரசு தேர்வு செய்யும். இதில் சங்கர் ஜிவாலுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

 இது ஒரு புறம் இருக்க, பணி ஓய்வுக்குப் பின்னர் சைலேந்திர பாபு முக்கிய பதவி ஒன்றை குறிவைத்துள்ளாராம். அநேகமாக  தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் பதவிக்கு முயற்சித்து வருவதாக சொல்கிறார்கள்.