பழைய கோவில் மீது விழுந்த இடி! தீங்கு வருமா என அச்சம்?

கு.அசோக்,
1000 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் கருவறை கோபுரத்தில் இடி தாக்கியதில் சிலை சேதமடைந்தது. அதில் இருந்த புறாக்கள் உயிரிழந்தன.
இராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தில் இந்து அறநிலைத்துறை கட்டுபாட்டில் இயங்கி வரும் அருள்மிகு ஸ்ரீ மணிகண்டேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் மீது நேற்று இரவு இடி விழுந்தது.
அதில் கோவிலின் உட் பிரகாரத்தில் உள்ள கருவறை கோபுரத்தின் மீது இடி தாக்கியதில் கோபுரத்தில் இருந்த இரண்டு சிலைகள் சேதமானதோடு அதில் கூடு கட்டி வாழ்ந்து வந்த 10 புறாக்களும் உயிரிழந்தது.
வழக்கம்போல் இன்று பூஜை செய்ய வந்த பூசாரி பார்த்து கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் என்பவருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ மணிகண்டேஸ்வரர் கருவறை கோபுரத்தில் இடி தாக்கியதில் சிலைகள் சேதமான சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஊருக்கு ஏதேனும் தீங்கு வருமோ என்று மக்கள் அஞ்சுகின்றனர்.