அரசு பள்ளியில் நிழல் தந்த மரத்தை வெட்டியவர்கள் கைது!

 கு.அசோக்,

 அரசு பள்ளி வளாகத்தில் பட்டப்பகலில் உரிய அனுமதியின்றி  மரங்களை டிராக்டர் மூலம் கடத்த முயன்ற இரண்டு குற்றவாளிகள்  மீது கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பு.

 இராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அடுத்த லாலாபேட்டை பகுதியில் இயங்கி வரும் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பல ஆண்டுகளாக வளர்த்து வந்த வேப்பமரம், புங்கமரம், காட்டுவாமரம் ஆகிய மரங்களை யாரோ மர்ம நபர்கள் வெட்டியிருக்கிறார்கள்.

 பின்னர் அதனை இரண்டு டிராக்டர் மூலமாக கொண்டு செல்ல முயற்சி செய்வதாக அப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

 தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் கோட்டாட்சியர் ராஜராஜன் தலைமையிலான அதிகாரிகள் உடனடியாக வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்தபோது உரிய அனுமதியின்றி இரண்டு டிராக்டர் மூலமாக மரங்களை வெட்டி கொண்டு செல்வது தெரியவந்தது.

 இதனையடுத்து அனுமதியின்றி மரங்களை வெட்டிய பெருங்காஞ்சி பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் வயது (39) அம்மூர் பகுதியை சேர்ந்த பிரதீப் குமார் வயது (28) ஆகிய இரண்டு குற்றவாளிகளை கைது செய்ததோடு மரங்களை வெட்டி சென்ற இரண்டு டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.

 கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.