பட்டையை கிளப்பும் இரண்டாம் பட்ஜெட்! முழு விவரமும் தெளிவாக!

பட்டையை கிளப்பும் இரண்டாம் பட்ஜெட்! முழு விவரமும் தெளிவாக!

ம.பா.கெஜராஜ்,

இருப்பிடத்திற்கே நிருவாகம்

   பொது மக்களின் குறைகளை விரைவாகவும், நிறைவாகவும் தீர்ப்பதற்கு இந்த அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த ஆண்டு முதல்வரின் முகவரித் திட்டத்தில், பெறப்பட்ட 17.7 இலட்சம் மனுக்களில், 17.3 இலட்சம்

   மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. தீர்வு காணப்பட்ட மனுக்களின் மீது மனுதாரர்களிடமிருந்து பின்னூட்டங்கள் பெறப்பட்டு தரக்கண்காணிப்புப் பிரிவால் மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

   அரசு அலுவலகங்களை மக்கள் தேடி வரும் நிலையை மாற்றி, அவர்கள் இருப்பிடத்திற்கே நிருவாகத்தை கொண்டு செல்வதே இந்த அரசின் குறிக்கோளாகும்.

   'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற இந்த அரசின் புதிய திட்டத்தில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று, களஆய்வு மேற்கொள்கின்றார். இதன் அடுத்தகட்டமாக, அரசின் திட்டங்களையும் சேவைகளையும் கடைக்கோடி மக்களும் பெற்றுப் பயனடையும் வகையில் அனைத்து ஊராட்சிகளிலும், நகர்ப்புரப் பகுதிகளிலும் ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில், அனைத்து அரசுத்துறைகளையும் ஒருங்கிணைத்து அரசு சேவை முகாம்கள் நடத்தப்படும். ஒட்டுமொத்த அரசு நிருவாக இயந்திரமும், மக்களை தேடிச் சென்று, அவர்களுக்குத் தேவையான சேவைகளை அளிப்பதற்கு இத்திட்டம் வழிவகை செய்யும்.

 

நில நிருவாகம்

நில உரிமையாளர்கள் பயன்பெறும் வகையில்,ஒரு நம்பகமான, எளிய நிலப்பதிவேட்டு முறையைக் கொண்டு வர அரசு உறுதியாக உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட நிலங்கள் விற்பனை பதிவு செய்யப்பட்டவுடன், அவற்றிற்கான பட்டாவை தடையின்றி மாற்றம் செய்வதற்காக, வருவாய், பத்திரப்பதிவு, நகர் ஊரமைப்புத் துறை, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து, புதிய மென்பொருள் உருவாக்கப்படும். இந்நிதியாண்டில், கிராம நத்தப் பதிவேடுகள் கணினிமயமாக்கப்பட்டு, நத்தம் நிலங்களுக்கான பட்டா மாற்றும் முறை, இணையவழியில் மேற்கொள்ளப்படும்.

சமூகப் பாதுகாப்பு

விளிம்புநிலையில் உள்ள மக்களுக்கும், நலிவுற்ற பிரிவினருக்கும் தக்க சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்ய, பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர், மே, 2021 முதல் புதிதாக 5,76,725 பேர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்கள் வழங்கப்பட்டுள்ளன.

  இவை தவிர, பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான ஒரு இலட்சம் பேர்களுக்கு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கப்படும். இதன் மூலம், சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை 35.8 இலட்சமாக உயரும். சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்காக இம்மதிப்பீடுகளில் 5,346 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவல்

சட்டம் ஒழுங்கை இந்த அரசு திறம்பட நிலைநாட்டியதன் காரணமாக, தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகவும், சமுதாய நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலைத் தடுப்பதற்கு, அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நடவடிக்கைகளால், 13,491 போதைப் பொருள் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுடைய வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

நிருவாகத்தில் வெளிப்படைத் தன்மையை மேலும் அதிகரிக்க, மாநிலம் முழுவதிலுமுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 38.25 கோடி ரூபாய் மொத்தச் செலவில் கண்காணிப்புக் கேமரா அமைப்பு மேம்படுத்தப்படும்.

  சமூக ஊடகங்கள் வாயிலாக தவறான காணொலிகளைப் பரப்பி புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே அச்சத்தை உருவாக்க, அண்மையில் சமூக விரோதிகள் சிலரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அரசின் விரைவான, கடுமையான நடவடிக்கைகளால் ஒடுக்கப்பட்டுள்ளன. இச்செயல்களில் ஈடுபட்ட சமூகவிரோதிகள் மீது 11 வழக்குகள் பதியப்பட்டு,கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 அரசின் இந்த உறுதியான நடவடிக்கை அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. சுமார் 4இலட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை மாவட்ட நிருவாகமும், காவல்துறை அலுவலர்களும்நேரில் சந்தித்து உண்மையை விளக்கினர். வெளி மாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிவதற்கான பாதுகாப்பான பணிச்சூழலை எடுத்துரைத்து அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் அனைத்து முயற்சிகளையும் பீகார், ஜார்கண்ட் மாநில அரசுகளுடன் இணைந்து அரசு மேற்கொண்டு வருகிறது.

அரசுப் பணியாளர் நலன்

 அரசுப் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்களின் நலனைப் பாதுகாப்பதில் இந்த அரசு கண்ணும் கருத்துமாக உள்ளது. பழைய அரசு அலுவலர் குடியிருப்புகள் படிப்படியாக புதிதாகக் கட்டப்படும். வரும் நிதியாண்டில் 100கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும். உயர்ந்து வரும் கட்டுமானச் செலவுகளைக் கருத்திற்கொண்டு, அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் வீடுகட்டும் முன்பணம்

40 இலட்சம் ரூபாயிலிருந்து 50 இலட்சம் ரூபாயாக வரும் நிதியாண்டிலிருந்து உயர்த்தப்படும்.

 ஓய்வூதியதாரர் இறக்க நேரிட்டால், குடும்ப உறுப்பினர்களுக்கு 'தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களின் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்தில்' நிதியுதவியாக 50,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

 கோவிட் பெருந்தொற்றுக் காலத்திற்குப் பின்னர், இந்நிதியுதவிக்கான கோரிக்கைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஓய்வூதியர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு 202122ஆம் ஆண்டில் 25 கோடி ரூபாயும், 2022-23 ஆம் ஆண்டில் 50 கோடி ரூபாயும் சிறப்பு நிதியாக இந்த அரசு வழங்கியுள்ளது. நிலுவையிலுள்ள விண்ணப்பங்களை தீர்வு செய்ய மேலும் 25 கோடி ரூபாய் சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றின்போது உயிரிழந்த 401 முன்களப் பணியாளர்கள் குடும்பத்தினருக்கு, தலா 25 இலட்சம் ரூபாய் வீதம் 100 கோடி ரூபாய் கருணைத்தொகை மாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

பதிவுத்துறை

 01.04.2012 அன்று உயர்த்தப்பட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, 09.06.2017 அன்று முதல் ஒரே சீராக 33 சதவீதம் குறைக்கப்பட்டது. மேலும், விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணங்களுக்கான பதிவுக் கட்டணம் ஒரு சதவீதத்திலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தப்பட்டது. சந்தை மதிப்பிற்கு ஏற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்தவும், பதிவுக் கட்டணத்தைக் குறைக்கவும் பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.

   இந்த கோரிக்கைகளை ஏற்று, வழிகாட்டி மதிப்பில் திருத்தத்தைப் பரிந்துரைக்க ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது. இக்குழு நிலஅளவை எண் வாரியாக திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் தேவைப்படும். ஆகவே, வெளிச்சந்தையில் சொத்துகளின் மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதால், இக்குழுவின் அறிக்கை பெறும்வரை, வழிகாட்டி மதிப்பை 08.06.2017 வரை கடைபிடிக்கப்பட்டு வந்த வழிகாட்டி மதிப்பிற்கு ஈடாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. நிலம் வாங்குபவர்களின் சுமையைக் குறைக்க, பதிவு கட்டணத்தை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

  இனி சொத்து விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் ஆகிய ஆவணங்களுக்கு, 8-6-2017 வரை கடைப்பிடிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பில் 5 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் சொத்து மாற்று வரி மற்றும் 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணத்திற்கு 7 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகள் எளிய, நடுத்தர மக்களுக்கு, குறிப்பாக வங்கிக் கடன் மூலம் வீடு வாங்குபவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.

மகளிர் உரிமைத் தொகை

 சமூகத்தின் சரிபாதியான பெண்ணினத்தை - சரிநிகர் சமமாக உயர்த்த திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது திராவிட மாடல் அரசு. கல்வியில், நிருவாகத்தில், அதிகாரம் மிக்க பொறுப்புகளில், பொருளாதாரத்தில், சமூகத்தில் பெண்களை உயர்த்தும் திட்டங்களைத் திராவிட முன்னேற்றக் கழக அரசு அமையும் போதெல்லாம் தீட்டி செயல்படுத்தி வருகிறோம்.

 மகளிருக்குச் சொத்துரிமையும், உள்ளாட்சி அமைப்புகளில் தனி இடஒதுக்கீடும் அளித்தது முதல், இன்று அவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கியது வரை, மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம். அந்த வரிசையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று நாங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளோம்.

சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம் என்ற இலக்கின்படி செயல்பட்டு வருபவர்கள் மட்டுமல்ல, சொல்லாத நல்ல பல திட்டங்களையும் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம் என்பதை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அறிவீர்கள். மக்களை தேடி மருத்துவம், புதுமைப் பெண், நான் முதல்வன் போன்றவை தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாதவை. இத்தகைய புதுமையான திட்டங்களை செயல்படுத்தியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மகளிருக்கு உரிமைத் தொகை தரப்படும் என்ற இந்த வாக்குறுதியையும் உறுதியாக நிறைவேற்றிட வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

 அதன் அடிப்படையில், தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். ஒன்றிய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், தாய் தமிழ்நாட்டின் தலைமகன் - பேரறிஞர் பெருமகன் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் முதல் இத்திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.

  இத்திட்டத்தின் கீழ் மகளிர் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாட்டு மகளிரின் சமூக பொருளாதார வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்திற்காக, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

பகுதி-ஆ

மாநில அரசின் நிதிநிலை

சட்டமன்றப் பேரவைத் தலைவர் அவர்களே,

நான் இதுவரை இந்த அரசின் முக்கிய சீர்திருத்தங்களையும் முன்முயற்சிகளையும் எடுத்துரைத்துள்ளேன். தற்போது மாநிலத்தின் ஒட்டுமொத்த நிதிநிலைமையை விளக்க விழைகிறேன்.

மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் சதவீதம் குறைந்து வரும் போக்கை தடுக்க, வரி விகிதங்களை சீரமைத்தல்,வசூலிப்புத் திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிதி திரட்டும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இதன் விளைவாக, மாநிலத்தின் சொந்த வரி வருவாய்,2022-23 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடான 1,42,799.93 கோடி ரூபாயுடன் ஒப்பிடும்போது திருத்த மதிப்பீடுகளில் 1,51,870.61 கோடி ரூபாயாக உயருமென்று மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டில், மாநிலத்தின் சொந்த வரி வருவாய்1,81,182.22 கோடி ரூபாயாக மேலும் உயருமென்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது திருத்த மதிப்பீடுகளுடன் ஒப்பிடுகையில் 19.30 சதவீதம் அதிகமாகும். வரவு-செலவுத் திட்டத்தில் கணித்தவாறு, மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய் திருத்த மதிப்பீடுகளிலும் 15,309.40 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

   வரும் ஆண்டில், திருத்த மதிப்பீடுகளைவிட 32.10 சதவீதமாக உயர்ந்து, 20,223.51 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

  ஒன்றிய வரவு செலவுத் திட்டக் கணிப்புகளுக்கு இணையாக, மத்திய வரிகளின் பங்கு, திருத்த மதிப்பீடுகளில் 38,731.24 கோடி ரூபாயாகவும் வரவு செலவுத் திட்டத்தில்41,664.86 கோடி ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளன. திருத்த மதிப்பீடுகளில் இப்பங்கு உயர்ந்திருந்தாலும், ஒன்றிய அரசு தொடர்ந்து அதிக அளவில் மேல் வரிகளையும் கூடுதல் கட்டணங்களையும் விதிப்பதால், மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு மிகவும் குறைவாகவே உள்ளது.

  ஒன்றிய அரசிடமிருந்து பெறப்படும் உதவி மானியங்கள், திருத்த மதிப்பீடுகளில் 39,748.42 கோடி ரூபாயாகவும் இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் 27,444.64 கோடி ரூபாயாகவும் (16,214.83 கோடி ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரி நிலுவைத் தொகை உட்பட) மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் நிலுவையிலுள்ள சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடாக எதிர்ப்பார்க்கப்படும் 4,572.82 கோடி ரூபாயும் இதில் அடங்கும்.

  சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு முறை வழங்கும் காலத்தினை (அதாவது உத்தரவாதம் அளிக்கப்பட்ட14 சதவீத உயர்வு ஒவ்வொரு ஆண்டும்) ஐந்தாண்டுகளுக்கு மேல் நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்கள் ஒன்றிய அரசுக்கு வைத்த கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்கவில்லை. இதனால் 30-06-2022 முதல் மாநிலங்கள் தாங்கள் பெற்று வந்த ஒரு முக்கிய வருவாய் ஆதாரத்தை இழந்துள்ளன.

  சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு முறையில் உள்ள நிலுவை நீங்கலாக ஆண்டுதோறும் ஒன்றிய அரசிடமிருந்து பெறப்படும் மொத்த நிதியானது (அதாவது மத்திய வரிகளில் பங்கு மற்றும் ஒன்றிய அரசிடமிருந்து பெறும் உதவி மானியத்தின் மொத்தம்) மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2014-15 ஆம் ஆண்டை ஒப்பீட்டுப் பார்க்கையில் ஒரு சதவீத அளவுக்கு குறைந்துள்ளதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

  இந்த நிதிக் குறைவு 2022-23 ஆம் ஆண்டிற்கு சுமார் 24,840 கோடி ரூபாயாகவும் 2023-24 ஆம் ஆண்டிற்கு 28,327 கோடி ரூபாயாகவும் இருக்கும்.

 ஒட்டுமொத்தமாக, திருத்த மதிப்பீட்டில் மொத்த வருவாய் வரவினங்கள் 2,45,659.67 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2022-23 ஆம் ஆண்டின் வரவுசெலவு மதிப்பீடான 2,31,407.28 கோடி ரூபாயோடு ஒப்பிடும்போது 6.16 சதவீதம் அதிகமாகும். வரும் ஆண்டில், வருவாய் வரவினங்கள் 2,70,515.23 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, திருத்த மதிப்பீடுகளை விட 10.12 சதவீதம் அதிகமாகும்.

  செலவினங்களைப் பொறுத்தவரை, திறமையான நிதி மேலாண்மையின் காரணமாக, மொத்த வருவாய் செலவினங்கள் 2022-23 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட மதிப்பீடான 2,84,188.45 கோடி ரூபாயோடு ஒப்பிடும்போது திருத்த மதிப்பீடுகளில் 2,76,135.68 கோடி ரூபாயாக குறையுமென மதிப்பிடப்பட்டுள்ளது. வளர்ச்சிப் பணிகளுக்குப் போதுமான

நிதி வழங்கப்படுவதை அரசு உறுதி செய்துள்ளது.

  மானியங்கள், நிதி பரிமாற்றங்களுக்கான செலவினங்கள், 2022-23 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மதிப்பிடப்பட்ட 1,13,643.10 கோடி ரூபாயைக் காட்டிலும் திருத்த மதிப்பீடுகளில் 1,18,841.01 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது, இதனை எடுத்துக்காட்டுகிறது. வரும் ஆண்டில், மொத்த வருவாய் செலவினம் 3,08,055.68 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

  மொத்த வருவாய் செலவினங்கள் குறைந்துள்ளதாலும், வருவாய் வரவினங்கள் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாலும், 2022-23 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 52,781.17 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட வருவாய் பற்றாக்குறை திருத்த மதிப்பீடுகளில் 30,476.01 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத சாதனையாக, கடந்த 2 ஆண்டுகளில் தோராயமாக 31,850 கோடி ரூபாய் அளவில் வருவாய் பற்றாக்குறைக் குறைக்கப்பட்டுள்ளது.

2015-16 ஆம் ஆண்டில், முதன்முறையாக,வருவாய் பற்றாக்குறையின் அளவு மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்தைத் தாண்டியது. அதன்பின்,மாநிலத்தில் நிதிநிலை தொடர்ந்து சரிந்து, 2020-21 ஆம்ஆண்டில், வருவாய் பற்றாக்குறை பெருமளவில் உயர்ந்து3.28 சதவீதத்தை எட்டியது. இவ்வரசு வரலாறு காணாத சீர்திருத்தங்களை மேற்கொண்டு இவ்வீழ்ச்சியை தடுத்தது மட்டுமல்லாமல், நிதிநிலையை மேம்படுத்தி 2015-16 ஆம் ஆண்டிலிருந்த மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில்  1.23 சதவீதம் என்னும் அளவிற்கு வருவாய் பற்றாக்குறையை குறைந்துள்ளது.

வரும் ஆண்டில், இந்நாட்டின் வரலாற்றில் எந்த ஒரு மாநில அரசும் செயல்படுத்திடாத மாபெரும் பணபரிமாற்றத் திட்டமான மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த பின்னரும், வருவாய்ப் பற்றாக்குறை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில்1.32 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது, 2017-18ஆம் ஆண்டில் இருந்த சதவீதத்தைவிடக் குறைவாகும். 2023-24 ஆம் ஆண்டு இந்த வரவு செலவுத் திட்டத்தில், வருவாய் பற்றாக்குறை 37,540.45 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வரவு-செலவுத் திட்டத்தில், மாநிலத்தில் மூலதனப் பணிகளுக்கான செலவினங்களை ஊக்குவிக்கஅரசு திட்டமிட்டுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்தில்44,365.59 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது திருத்தப்பட்ட மதிப்பீடுகளைவிட 15.69 சதவீதம் அதிகமாகும். வரவு-செலவுத் திட்டத்தில், நிகரக் கடன்கள் மற்றும் முன்பணங்கள் உட்பட மாநிலத்தின் மொத்த மூலதனச் செலவு 54,534.46 கோடி ரூபாயாகும்.

திருத்த மதிப்பீட்டில் நிதிப் பற்றாக்குறை74,524.64 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுமாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.0 சதவீதமாகும்.

2022-23 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் இது 15,589.07 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீத நிதிப் பற்றாக்குறை என்ற முக்கியமான இலக்கை

அரசு அடைந்துள்ளது.

 இந்த அரசு பதவியேற்ற போது முந்தைய அரசு 4.61 சதவீத நிதிப்பற்றாக்குறையை விட்டுச்சென்றது. அதனை 3 சதவீதத்திற்கு 2 ஆண்டுகளிலேயே குறைத்து மாபெரும் சாதனையை இந்த அரசு படைத்துள்ளது. வரும் ஆண்டில், நிதிப் பற்றாக்குறை 92,074.91 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 3.25 சதவீதமாகும்.

 15-வது நிதிக் குழு அதிகபட்ச கடன் எல்லையாக மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவீதம் கடன் மற்றும் எரிசக்தித் துறை சீரமைப்புக்காக தமிழ்நாடு பெற இயலும் கூடுதல் 0.25 சதவீதம் கடன் பெறப்படும்என வரவு-செலவுத் திட்டத்தில் மதிப்பிடப்பட்டுள்ளது.

 இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து, முதல் முறையாக அந்த அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவிற்கு கடன் பெற இந்த

வரவு-செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

 2014 ஆம் ஆண்டு முதல் அதிகரித்து வரும் மூன்று அமைப்பு சார்ந்த அடிப்படை பிரச்சனைகளை உங்கள் கவனத்திற்கு கொண்டுவரவிழைகிறேன்.

  2006-07 ஆம் ஆண்டில் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமாக இருந்த மாநிலத்தின் சொந்த வருவாய் தற்போது ஏறத்தாழ ஏழு சதவீதமாகக் குறைந்துள்ளது. இதனால் தொடர்ந்து வருவாய்ப் பற்றாக்குறை ஏற்படுகிறது. வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைத்து, புதிய திட்டங்களுக்கும் முதலீடுகளுக்கும் நிதி ஆதாரத்தை உருவாக்க, மாநிலத்தின் வருவாயை உயர்த்த வழி வகைகளை கண்டறிவது மிகவும் அவசியம்.

  மாநிலத்தின் தரவுகள் அடிப்படையிலான ஆளுகை மூலம் வருவாய் செலவினங்கள் திட்டமிட்ட நோக்கங்களுக்கும் தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும். இல்லையெனில், இச்செலவினங்கள் பணவீக்கம் வாயிலாக, ஏழை, நடுத்தர மக்களின் மீது ஒரு மறைமுக வரியாக பாதிக்கும்.

 நமது மாநில வருவாயில் 85 சதவீதமாக உள்ள விருப்புரிமையற்ற செலவினங்களைக் குறைத்து விருப்புரிமைச் செலவினங்களின் பங்கினை அதிகரிக்க வேண்டும்.

  2023-24 ஆம் ஆண்டில் நிகரக்கடன் 91,866.14 கோடி ரூபாயாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இதில் 82,625.96 கோடி ரூபாய் நிகர வெளிச்சந்தைக் கடன்களும் 9,240.18 கோடி ரூபாய் பிற வழிக் கடன்களும் அடங்கும். ஆகையால், 31-03-2024 அன்று மொத்தக் கடன் நிலுவை 7,26,028.83 கோடி ரூபாயாகவும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடனுக்கான வீதம் 25.63 எனவும் இருக்கும். இவை 15 ஆம் நிதிக்குழு நிர்ணயித்துள்ள 29.1 சதவீதம் என்ற எல்லைக்குள்ளாகவே இருக்கும்.

இடைப்பட்ட கால நிதி நிலவரத் திட்டம்,

 2003 ஆம் ஆண்டின் தமிழ்நாடு நிதிநிலை நிருவாகப் பொறுப்புடைமைச் சட்டத்தின் நிபந்தனைகளை நாம் வெகு விரைவில் நிறைவேற்றுவோம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. இடைப்பட்ட கால நிதி நிலவரத் திட்டத்தை இவ்வுரையின் ஒரு பகுதியாக படிக்கப்பட்டதாகக் கருதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த அரசு திறமையான நிதி மேலாண்மை செய்து, மாநிலத்தில் நிதிநிலையைச் சீராக்கி, கடனைச் செலுத்தும் திறனை மேம்படுத்தியுள்ளது. இதனால், தற்போது மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு, வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி, மாநிலத்தின் வளர்ச்சியை பெருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும், மாநிலத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதற்காகவும் நிதி ஆதாரங்களை முழுமையாக பயன்படுத்துவதிலும், வருவாய் வரவினங்களை பெருக்குவதிலும் கவனத்தை செலுத்துவதன் மூலம் இந்த அரசு நிதி ஆதாரங்களை அதிகரிக்கும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே!

 இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து தாக்கல் செய்யும் இரண்டாவது முழு நிதிநிலை அறிக்கை இதுவாகும். நமது மாநிலத்தின் நிதி நிலையில் 2014 இல் இருந்து தொடர்ந்து ஏற்பட்ட சரிவைத் தடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் பெருமளவில் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை கொண்டு வந்துள்ளோம். இடைப்பட்ட கால நிதி நிலவரத் திட்டத்தில் தெரிவித்துள்ளவாறு வருவாய்ப் பற்றாக்குறை இல்லா மாநிலம் என்ற இலக்கை நோக்கி நாங்கள் பயணிக்கிறோம். முதலீடுகளை ஈர்க்கவும், வளர்ச்சிக்கும் இது ஒரு உகந்த சூழலை உருவாக்கும்.

  வேகமாக அதிகரிக்கும் வட்டிச் செலவினங்கள் மற்றும் நிதி நிருவாகத்தில் ஒன்றிய அரசால் விதிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோதும், இந்த சாதனையை நாங்கள் புரிந்துள்ளோம். இது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில், நிருவாகத்தில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றத்திற்கு சான்றாகும்.

 இந்த நிதிச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் அதே வேளையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். மேலும், அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், குறிப்பாக நலிவுற்றோர், மகளிர் ஆகியோருக்கு வாய்ப்புகளும் வளர்ச்சியும் ஏற்படுத்தும் விதம் புதுத் திட்டங்கள் வடிவமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். 2021 மே மாதம் 7 ஆம் தேதி ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, இந்த அரசு 1 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கும் மேலான புதிய திட்டங்களை அறிவித்துள்ளது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இதன் விளைவாக தமிழ்நாட்டு மக்கள் இந்த  அரசின் மீது அதிக நம்பிக்கையையும் எதிர்பார்ப்புகளையும் கொண்டுள்ளனர். குறிப்பாக, கடந்த 2 ஆண்டுகளில் இந்த அரசின் சீரான, செம்மையான நிருவாகத்தினாலும் செயல்படுத்தியுள்ள பல உன்னத புதிய திட்டங்களாலும் மக்களின் எதிர்பார்ப்புகள் மேலும் உயர்ந்துள்ளது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் இலக்குகளையும், தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளையும் பெருமளவில் நிறைவேற்றும் வகையில் இந்த வரவுசெலவுத் திட்டத்தைத் தயாரித்திருக்கிறோம்.

   உலகப்புகழ் பெற்ற நிபுணர்களைக் கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொருளாதார ஆலோசனைக்குழு, இந்த வரவு-செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதில், நேரம் ஒதுக்கி ஆலோசனைகள் வழங்கியதற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளை இந்த அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.

  இந்த வரவு-செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கு அயராது உழைத்த நிதித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.நா.முருகானந்தம், இ.ஆ.ப., அவர்களுக்கும் நிதித்துறையின் பிற அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

"கயல் எழுதிய இமய நெற்றியின்,அயல் எழுதிய புலியும் வில்லும்"என்கிறது சிலப்பதிகாரம்.

  புகழ்பெற்ற தொன்மையான இத்தமிழ்ப் பேரரசுகளின் வழித்தோன்றலான இந்த திராவிட மாடல் அரசு தனது வரலாறு காணாத சாதனைகளை நாடே வியக்கும் வண்ணம் மக்களின் உள்ளத்தில் தொடர்ந்து பதித்து வருகிறது.

   மக்களின் பேராதரவுடன் இனிவரும் காலங்களிலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான இந்த அரசு தமிழ்ச் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய வரலாற்றுக் கடமையைத் தொடர்ந்து ஆற்றும் என்று உறுதி கூறுகிறேன்.

  இந்த வரவு-செலவுத் திட்டத்தை உருவாக்குவதற்கு எனக்குத் தொடர்ந்து வழிகாட்டுதல்களும், ஆலோசனைகளையும், ஊக்கமும் வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 20232024ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு இந்த அவையின் ஒப்புதலைப் பெற்றுத் தருமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்க தமிழ்! வெல்க தமிழ்நாடு!!

முனைவர் பழனிவேல் தியாக ராஜன்

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர், சென்னை.