எடப்பாடி பழனிசாமியின் அறிவுரையை தமிழக அரசு கேட்க வேண்டும்!சொல்கிறார் முன்னால் அமைச்சர்!

க.பாலகுரு,
எடப்பாடி பழனிசாமியின் அறிவுரையை தமிழக அரசு கேட்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியிருக்கிறார்.
தமிழக அரசைக் கண்டித்து தஞ்சையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. காவேரி பிரச்சனை தொடர்பாக கண்டிக்க நடந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், திமுக அரசை விமர்சித்தார். காவிரி விவகாரம் தொடர்பாக தஞ்சை கீழவாசல் பகுதியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், காமராஜ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு போதிய அளவில் நீரை பெற்றுத் தரவில்லை என திமுக அரசைக் கண்டித்தும், உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். மேலும், குறுவை சாகுபடி மேற்கொண்ட சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் கருகிய நெற்பயிர்களுக்கு, ஏக்கருக்கு 35,000 ரூபாயை நிவாரண தொகையாக உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
ஆர்பாட்டத்தில் பேசிய விஜயபாஸ்கர், "காவிரி நடுவர் மற்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட்ட பெருமைக்கு சொந்தக்காரர் ஜெயலலிதா. அதிமுகவையா அடிமை அரசு என்று சொல்கிறீர்கள்? மத்திய பாஜக அரசை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, சட்டப் போராட்டம் நடத்தி காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமிதான்.
மழை வருமா, கர்நாடகா தண்ணீர் திறக்குமா என எந்த ஆலோசனையும் இன்றி மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்துவிட்டவர் ஸ்டாலின். கர்நாடகாவில் அணைகள் நிரம்பி வழிகின்றன. ஆனால், தஞ்சையில் பயிர்கள் காய்ந்து கிடக்கிறது. ஆகவே, உண்மை விவசாயியான எடப்பாடி பழனிசாமியின் அறிவுரையை தமிழக அரசு கேட்க வேண்டும்" என்று ஆவேசமாக பேசினார்.