மக்களுக்கு ஷாக் கொடுக்கும் மின் கட்டணம்! கொக்கி போடும் பழக்கத்துக்கு தடை வருமா?

மக்களுக்கு ஷாக் கொடுக்கும் மின் கட்டணம்! கொக்கி போடும் பழக்கத்துக்கு தடை வருமா?

ம.பா.கெஜராஜ்,

தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி 100 -200 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோர் கூடுதலாக 27.50 ரூபாய் செலுத்தும் வகையில் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், 201 - 300 யூனிட் வரை - ரூ .72.50, 301-400 யூனிட் வரை - ரூ .147.50 மற்றும் 401 -500 யூனிட் வரை உபயோகிக்கும் நுகர்வோர் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரூ .297.50 அதிகமாக செலுத்தும் விதத்தில் மின் கட்டணத்தை அதிகரிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

அத்துடன் 'ஒரு வீடு ஒரு மின் இணைப்பு' திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

  இந்நிலையில் வீடு மற்றும் குடிசைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இவவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும். இதேபோன்று விசைத்தறிகளுக்கான 750 யூனிட் இலவச மின்சாரம் அளிக்கும் திட்டமும் தொடரும். 100 யூனிட் இலவச மின்சாரம் வேண்டாம் என்று விரும்பினால், அதுகுறித்து நுகர்வோர் தாமாக முன்வந்து அரசுக்கு தெரிவிக்கலாம் என்று அமைச்சர் செந்தில பாலாஜி அறிவித்துள்ளார்.

மின்கட்டண உயர்வும்-காரணமும்

   மின் வாரியத்துக்கு கடந்த 10 ஆண்டுகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கணக்கில் கடன் ஏற்பட்டிருக்கிறது., மூன்றில் இரண்டு பங்கு நிலக்கரியை தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டிய நிலை, மின் கட்டணத்தை உயர்த்த சொல்லி மத்திய அரசு தொடர்ந்து கொடுத்துவரும் அழுத்தம் போன்ற காரணங்களால், எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர தமிழக அரசுக்கு வேறு வழியில்லை என்றும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

 அது சரி அரசியல் நிகழ்ச்சிகளுக்கு கொக்கி போடறாங்களே அதற்கு தடை போட்டால் என்ன? என்று மிஸ்டர் பொது ஜனம் கேட்கிறார்கள். அரசியல்வாதிகளின் வருகைக்காக கூச்சமே இல்லாமல் மின்சாரம்  திருடுவது இன்றளவுக்கும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.

   அதற்கு இந்த அரசு முற்று புள்ளிவைத்தால் மின்சார பற்றாக்குறை தீரும், மின்வாரியத்துக்கு வரும்படியாவது கிடைக்கும்.