49 வது புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா! 31 வது காவல் துறை இயக்குனராக சங்கர் ஜிவால் நியமனம்!!

ம.பா.கெஜராஜ்,
தமிழ்நாட்டின் 49 வது புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப. அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக அரசு அறிவிப்பு வெளியாகியிட்டிருக்கிறது.
தற்போதைய தலைமைச் செயலாளராக இருக்கும் வெ.இறையன்பு, இ.ஆ.ப. அவர்கள் நாளை ஓய்வு பெறுகிறார்.
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி பொறுப்பேற்றது. அன்றே தமிழக அரசின் தலைமை செயலாளராக வெ.இறையன்பு ஐஏஏஸ் நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு 60 வயது நிறைவடைந்துவிட்டதால் இந்த மாதம் அதாவது ஜூன் 30 தேதியுடன் (நாளை) ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமைச் செயலாளர் யார் என்று பேசப்பட்டு வந்தன.
அதில் ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலில் முதல் நிலையில் உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா, எஸ்.கே.பிரபாகர் மற்றும் சிவ்தாஸ் மீனா ஆகியோரது பெயர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
அப்படியிருக்க நகராட்சி நிர்வாகத் துறை செயலராகப் பொறுப்பு வகிக்கும் சிவ்தாஸ் மீனாவை, தமிழகத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்து, அதுகுறித்து மத்திய அரசிடம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனாவை நியமிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.
ஆக, தமிழ்நாட்டின் 49வது தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா ஜூலை 1ம் தேதி பொறுப்போர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிவ்தாஸ் மீனா 5.10.1964 அன்று பிறந்தார். என்ஜினியரிங் பட்டம் பெற்றவரான சிவ்தாஸ் மீனாவிற்கு ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் நன்கு தெரியும். ஜப்பான் மொழியையும் அவர் கற்றுள்ளார்.
1989ம் ஆண்டு ஐஏஏஸ் தேர்ச்சி பெற்று தமிழக கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக சிவ்தாஸ் மீனா பணியில் சேர்ந்தார். காஞ்சீபுரம் உதவி கலெக்டராக (பயிற்சி) பணியைத் தொடங்கிய சிவ்தாஸ் மீனா கோவில்பட்டி உதவிக் கலெக்டர், வேலூர் கூடுதல் கலெக்டர், மாவட்ட கலெக்டர் என அடுத்தடுத்து பொறுப்புகளை வகித்தார். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஊரக வளர்ச்சித் துறை, நில நிர்வாகத் துறை, போக்குவரத்துத் துறை என பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி நற்பெயர் எடுத்தவர்.
மேலும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் உள்பட பல முக்கிய பதவிகளை சிவ்தாஸ் மீனா வகித்துள்ளார். தற்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வரும் சிவ்தாஸ் மீனாவை, தமிழக அரசு தலைமைச் செயலாளராக பணியமர்த்தியிருக்கிறது
புதிய டிஜிபி சங்கர் ஜிவால்
அதேபோல் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சி சைலேந்திரபாபு அவர்கள் ஓய்வு பெறுகிற நிலையில் அவருக்கு மாற்றாக 31 வது காவல்துறை தலைமை இயக்குனராக திரு சங்கர் ஜிவால் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.