ரயில் விபத்தை தடுத்த தம்பதியருக்கு பகவதி ரயில் நிலையத்தில் பாராட்டு விழா!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
டார்ச் லைட் வெளிச்சம் காட்டி ரயில் விபத்தை தடுத்த தம்பதியினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டையை அடுத்த புளியரை பகுதியில் கடந்த 25ம் தேதி அதிகாலை சுமார் 1 மணிக்கு 20 மீட்டர் உயர மலைப்பாதையில் பிளைவுட் பலகைகள் ஏற்றி சென்ற லாரி, திடீரென மலை பாதையில் இருந்து கவிழ்ந்து உருண்டு அருகில் உள்ள ரயில் பாதையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக வந்த ரயிலை அருகில் வசித்து வந்த தம்பதி சண்முகையா, வடக்கத்தியாள் தம்பதி டார்ச் லைட் அடித்து நிறுத்தினர்.
இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதையறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தம்பதியினரை நேரில் அழைத்து ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
அவரை தொடர்ந்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா, புளியரையில் உள்ள வீட்டிற்கு சென்று சண்முகையா, வடக்கத்தியாள் தம்பதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், பகவதிபுரம் ரயில் நிலையத்தில் பாராட்டு விழா நடத்தி சான்றிதழும் ரொக்க பரிசும் வழங்கி சிறப்பித்தனர்.