ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சசிகலா! 5-ம்தேதி மரியாதை செய்கிறார்!

ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சசிகலா! 5-ம்தேதி மரியாதை செய்கிறார்!

 ஜி.எஸ்.மேத்யூராஜ்,

 மறைந்த முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் கடந்த 05.12.2016 ஆம் தேதி மறைந்தார். இந்நிலையில் அவரது ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் வரும் ஞாயிற்றுக் கிழமையன்று வருகிறது.

  இந்நிலையில் வி.கே.சசிகலா, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில்  அறிக்கை வெளியாகியுள்ளது,

 அதில் கூறி இருப்பதாவது,

 ஜெயலலிதா தமிழக மக்களின் உரிமைக்காகவும், ஏழை-எளிய மக்களின் துயர் துடைக்கவும் தம் வாழ் நாளெல்லாம் பாடுபட்டவர். உயிர் தொண்டர்களின் நலனில் அக்கறைக் கொண்டு, தன்னலமின்றி பொதுநலத்தோடு "மக்களால் நான் மகளுக்காகவே நான்" என்று தன் இறுதி மூச்சு வரை வாழ்ந்துக் காட்டிய ஒப்பற்ற மக்கள் தலைவி.

 நம் ஒவ்வொருவரின் இதயங்களிலும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஜெயலலிதா கடைபிடித்த அதே கொள்கையோடு, அவர் காட்டிய வழியில் தொடர்ந்து பயணிக்க, அவரது நினைவு நாளான வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு சசிகலா தொண்டர்களோடு சேர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்க இருக்கிறார்.

 இந்த புனித நிகழ்வில் தொண்டர்களும், அனைத்து பிரிவு நிர்வாகிகளும், ஜெயலலிதா தங்கள் முன் மாதிரியாக மனதில் வைத்து, தன்னம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சிங்கப் பெண்களும், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களும், ஜாதிமத பேதமின்றி, கட்சிப்பாகுபாடு இல்லாமல் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாக ஓர் அணியில் நின்று, ஒற்றுமையாக இணைந்து அனைவரும் முக கவசம் அணிந்து போதிய சமூக இடைவெளியுடன் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்  என அதில் கூறப்பட்டுள்ளது.

 அ.தி.மு.க.பொதுச்செயலாளர் சசிகலா என்கிற பெயரில் வெளியாகும் அறிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே ஆட்சேபனை எழுந்துள்ளதை அறிவோம்.

 முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பெரிய அளவில் புகார் எழுப்பி பேட்டியெல்லாம் கொடுத்தார். இருந்தும் கூட நிலமை மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.