செவிலியர் பணி, மருத்துவ சேவையின் இதயம்! முனைவர் ஜி.வி. சம்பத் நறுவீ மருத்துவமனையில் பேச்சு!

ம.பா.கெஜராஜ்,
வேலூர் நறுவீ மருத்துவமனையில் நடைபெற்ற சர்வதேச செவிலியர் தின விழாவில் மருத்துவ சேவையில் சிறப்பாக பணியாற்றி வரும் செவிலியர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்களை மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் வழங்கி அவர்களை பாராட்டினார்.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 12-ம் தேதி சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி வேலூர் நறுவீ மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தின விழா இன்று மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை மருத்துவமனை செவிலியர் பணி மேலாளர் ஆனந்தி வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சிக்கு மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தலைமை வகித்து சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி பேசுகையில்:
மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை புன்முறுவலுடன் அணுகி அவர்களின் நோயை அறிந்து மருத்துவர்களோடு இணைந்து சேவை செய்வது செவிலியர்களின் பணியாக உள்ளது. செவிலியர் பணி என்பது மருத்துவ சேவையின் இதயமாக கருதப்படுகிறது. நோயாளிகளுக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு நோயாளிகளை அதற்கு தயார்படுத்தி, அறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்களுடன் இணைந்து செயலாற்றுபவர்கள் செவிலியர்களே.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் குணமடைந்து செல்லும் வரை அவர்களை முழுமையாக கவனித்துக்கொள்வது செவலியர்களின் பணி இன்றியமையாததாக உள்ளது. எனவே, மருத்துவ சேவையில் செவிலியர்களின் பணியை போற்றும் வகையில் அவர்களுக்கு விழா நடத்துவது ஒரு நாள் மட்டும் அல்லாமல் ஆண்டு முழுவதும் அவர்களை கொண்டாட வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் நறுவீ மருத்துவமனை துணைத் தலைவர் அனிதா சம்பத், செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் திலிப் மத்தாய், தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், பொது மேலாளர் நிதின் சம்பத் மற்றும் மருத்துவர்கள், செவலியர்கள், ஊழியர்கள் பலர் பங்கேற்றனர். முடிவில் மருத்துவ கண்காணிப்பாளர் ஜேக்கப் ஜோஸ் நன்றி கூறினார்.