வயநாடில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்: பாதிக்கப்பட்டவர்களுக்கு ராகுல், பிரியங்கா நேரில் ஆறுதல்!

ம.பா.கெஜராஜ்
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை - நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ள மக்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
கேரள மாநிலம் வயநாடு அருகே நேற்று முன் தினம் அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மூன்று கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் அப்படியே மண்ணுக்குள் புதைந்தனர், 290 க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, நூற்றுக்கணக்கானோரை காணாமல் தேடும் பணி நடைபெற்று வருகிறது. 1000க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு கேரளாவுக்கு மீட்பு உதவிகள், மருத்துவ உதவிகள் செய்து வருகிறது. 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் பார்வையிட்டனர். உறவுகளை, உடைமைகளை இழந்து தவித்து வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட சூரல்மாலா உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்ற அவர்கள், அங்கு நிலைமையை ஆய்வு செய்தனர். ரெயின் கோட் அணிந்தபடி ஆற்றின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலத்தின் வழியாக சென்ற அவர்கள், அங்கும் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டனர்.
#WATCH | Kerala: Leader of Opposition in Lok Sabha and former Wayanad MP Rahul Gandhi along with party leader Priyanka Gandhi Vadra visit a relief camp at St Joseph UP School in Wayanad to meet the survivors of the landslide.
— ANI (@ANI) August 1, 2024
A landslide occurred here on 30th July claiming the… pic.twitter.com/NfbLGl2rsT
மேலும், மேப்படி என்ற இடத்தில் நிவாரண முகாமாக மாற்றப்பட்டுள்ள செயின்ட் ஜோசப் பள்ளிக்குச் சென்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் வருகையை ஒட்டி அங்கு காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் கூடி இருந்தனர். காவல் துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
பின்னர் அவர் செய்தியாளர்களிடையே பேசுகையில், என் தந்தை இறந்தபோது எவ்வளவு துக்கம் அடைந்தேனோ அதே துக்கத்தை இப்போதும் அடைந்துள்ளேன். இந்த பேரிடரில் பலர் தந்தை, தாயை மட்டுமின்றி குடும்பத்தையே இழந்துள்ளனர். இந்த துயரமான நேரத்தில் மக்களுடன் இருப்பது மிகவும் அவசியம். அரசியல் பிரச்சனைகளை பற்றி பேச இது சரியான நேரம் அல்ல என்றும் தெரிவித்தார். என் சகோதரன் ராகுலுக்கு என்ன கவலை உள்ளதோ அதேதான் எனக்கும் உள்ளது என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.