நிர்வாணப்படுத்தி மாணவர் ரேகிங்! 13பேர் கைது! மேற்கு வங்கத்தில் அரசியலாக்கப்பட்டது!

நிர்வாணப்படுத்தி மாணவர் ரேகிங்! 13பேர் கைது! மேற்கு வங்கத்தில் அரசியலாக்கப்பட்டது!

ம.பா.கெஜராஜ்,   

 ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட ராகிங் கொடுமையால் நிர்வாணமாக  ஓடிய மாணவன் தற்கொலை செய்துகொண்டார்,  இந்நிலையில்  மாணவன் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

 மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்பூர் பல்கலைக் கழக முதலாமாண்டு படித்து வந்த 17 வயதான மாணவர் கடந்த 9ஆம் தேதி இரவு திடீரென விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். ராகிங் தொல்லை காரணமாக மாணவர் தற்கொலை கொண்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியது. ராகிங் மற்றும் மாணவருக்கு அளிக்கப்பட்ட பாலியல் தொல்லை காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

 அதுகுறித்து விடுதியில் தங்கியிருந்தவர்கள் மற்றும் ஊழியர்களிடம் போலீஸ் விசாரணை நடத்தினர். அதில் அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆகஸ்ட் 9ஆம் தேதி விடுதி அறையில் இருந்த மாணவனை அவனது சீனியர்கள் ராகிங் செய்ய தங்களது அறைக்கு அழைத்துள்ளனர். மாணவன் நடந்து வந்தபோது பலவந்தப்படுத்தி ஆடைகளை கழற்றி நிர்வாணமாக்கியுள்ளனர்.

 டார்ச்சர் தாங்க முடியாமல் அதிலிருந்து தப்பிக்க ஒரு இடத்தில் இருந்து மாணவன் மற்றொரு அறைக்குள் நுழைந்து தாழ்ப்பாள் போட முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் சீனியர்கள் அவனை பிடித்து அழைத்துச் சென்று ராகிங் செய்துள்ளனர். இப்படியாக இந்த சம்பவம் இரவு 11 மணி வரை நீடித்துள்ளது. அத்துடன், ராகிங் செய்தவர்கள் மாணவன் தன் பாலின ஈர்ப்பாளர் என்றெல்லாம் கிண்டல்கள் செய்துள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான மாணவன், தான் தன் பாலின ஈர்ப்பாளர் இல்லை என்று கூறியுள்ளார். கொடுமைகளை தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் தற்கொலை என்ற விபரீத முடிவை எடுத்துள்ளார் என்று காவல்துறையினர் கூறினர்.

 இந்த வழக்கில் 13 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதானவர்களில் முக்கிய குற்றவாளியான சௌரப் சவுத்ரி உள்பட 12 பேருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்த காவல் துறையினர், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் கடுமையான சட்டத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிசீலித்து வருகின்றனர். புகழ்பெற்ற பல்கலைக் கழகத்தில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் மேற்கு வங்க அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.